பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் முதல் நொச்சிக்குப்பம் இடையே வசிக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஞாயிறன்று ( மே 21) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.
பட்டினப்பாக்கம் முதல் நொச்சிக்குப்பம் வரையிலான லூப் சாலையில் மீன் விற்கவும், குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்வதிலும் அரசு நிர்வாகம் மீனவர்களின் நலனுக்கு எதிரான நிலையை எடுத்து வருகிறது. இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.
இதன் ஒருபகுதியாக இந்த மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. நொச்சிக்குப்பம் மக்களுக்கு மறு குடியமர்வுத் திட்ட அடிப்படையில் கட்டி முடிக்கப்பட்டு மீதமுள்ள 874 குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்து தர வேண்டும். இந்த குடியிருப்புகளுக்கு பங்களிப்பாக மீனவர்களிடம் 5.30 லட்சம் ரூபாய் வசூலிப்பதை கைவிட வேண்டும்.
குடியிருப்பு உரிமைக்காக போராடிய நொச்சிக்குப்பம் மீனவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை அரசு திரும்ப பெற வேண்டும்.
லூப் சாலையில் உள்ள மீன் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், அதே இடத்தில், நவீன வசதிகளுடன் கூடிய மீன் அங்காடி கட்டித் தர வேண்டும். டுமிங் குப்பம், முள்ளிமாநகர் முதல் சீனிவாசபுரம் வரையுள்ள சிதிலமடைந்த வாரிய குடியிருப்புகளை இடித்துவிட்டு அதே இடத்தில் 500 சதுர அடி பரப்பளவில் புதுப்பித்து கட்டித்தர வேண்டும். திருமணமான அனைத்து மீனவ குடும்பங்களுக்கும் குடியிருப்பு ஒதுக்கீடு செய்யும் வகையில் புதிய குடியிருப்புகள் கட்ட வேண்டும்.
சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள பட்டினப்பாக்கம் நினைவு தூண் அருகில் இருந்து முள்ளிமா நகர் மீனவர் குடியிருப்பு பகுதிக்கும், பட்டினப்பாக்கத்திற்கும் செல்லும் சாலைகளை புதுப்பிக்க வேண்டும். மேலும், இந்த பகுதிகளில் உள்ள குப்பைகள் அகற்றி, மின்விளக்குகள் அமைக்க வேண்டும்.
லூப் சாலைக்கு சிந்தனை சிற்பி சிங்காரவேலர் பெயரை சூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.
கட்சியின் மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தை சீனிவாசபுரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ப.சுந்தர்ராஜன் தொடங்கி வைத்தார்.