ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடைசெய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலத் தலைவர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.
தமிழ்நாட்டில் சூதாட்டமும், லாட்டரி சீட்டு விற்பனையும் தடை செய்யப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். ஆனால், சமீபகாலங்களில் ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடும் ஒரு மோசமான போக்கு தமிழகத்திலும் தலைவிரித்து ஆடுகிறது. ‘ரம்மி விளையாட வாங்க’ என விளையாட்டு பிரபலங்கள் பலரும் பகிரங்கமாக தொலைக்காட்சியில் விளம்பரம் செய்கிறார்கள். தடை செய்யப்பட்ட சூதாட்டம் ஆன் லைனில் கனஜோராக நடப்பதும், அதற்கு பிரபலங்கள் விளம்பரங்கள் கொடுப்பதும் சூதாட்ட தடையை கேலி செய்வதாக உள்ளது. இந்த ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய சட்டம் இயற்ற வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இளைஞர்களின் வாழ்க்கையை இந்த விளையாட்டு சீரழிக்கிறது. இளைஞர்களின் நேரத்தை வீணடிக்கிறது; சிந்திக்கும் திறனையும் இழக்கச் செய்கிறது. படித்த பல இளைஞர்களும் இந்த ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுகின்றனர். தங்கள் வாங்குகின்ற சம்பளத்தில் பெரும்பகுதியை இதில் இழக்கின்றனர். இதனால் எண்ணற்ற இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. சில இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்ட துர்பாக்கியமான நிலையும் ஏற்பட்டுள்ளது.
போலீஸ் தரப்பில் இது குறித்து புகார் வருவதில்லை என்றும் அதனால் தங்களால் நடவடிக்கை எடுக்க இயலவில்லை என்றும் கூறப்படுகிறது. பெரும்பாலான சர்வர்கள் (server) அமெரிக்காவில் உள்ளதால் தங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் போலீசார் கூறுவது ஏற்புடையதாக இல்லை. ஏற்கனவே கொரோனாவில் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டு குடும்பங்களை நிர்க்கதியாக்குகிறது.
எனவே, ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டுமென மத்திய அரசையும், தமிழக அரசையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.