ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும், தமிழகத்திற்கான நிதியை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று சாஸ்திரி பவன் முற்றுகை போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது.
அரசியல் சாசனத்திற்கு விரோதமாக செயல்பட்டு வரும் ஆளுநரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென தமிழக மக்களும், ஜனநாயக இயக்கங்களும் தொடர்ந்து குரலெழுப்பி வருகின்றனர். தமிழகத்திற்கு துரோகம் இழைக்கும் மோடி அரசு அதேபோன்று, ஒன்றிய மோடி அரசு தமிழகத்தையும், தமிழ்நாட்டு மக்களையும் தொடர்ந்து வஞ்சித்து, துரோகமிழைத்து வருகிறது. தமிழகத்திற்கு உரிய வரிப் பங்கீட்டை ஒதுக்க மறுப்பது, கல்விக்கான நிதியை ஒதுக்க மறுப்பது; நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க மறுப்பது; 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை நிலுவை வைப்பது; தேசிய கல்விக் கொள்கையைத் திணிப்பது; தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பது; கல்வி, ரயில்வே, சுகாதாரம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாதது போன்ற தமிழக விரோதப்போக்கைத் தொடர்ந்து கடைபிடித்துவருகிறது. இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்; தமிழ்நாட்டிற்கு 100 நாள் வேலைத்திட்டத்திற்காக வழங்க வேண்டிய ரூ. 3,796 கோடி பாக்கித் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்; ‘சமக்ரா சிக்க்ஷா அபியான்’ எனப்படும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கான பள்ளிக்கல்வி நிதி ரூ.2,152 கோடியை உடனடியாக வழங்க வேண்டும்; நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்த மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டணச் சலுகையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இன்று சாஸ்திரி பவன் முற்றுகை போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது.
மாநிலச் செயலாளர் பெசண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி உள்ளிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.