tamilnadu

img

"ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டத்துக்கு எதிராக சிபிஎம் கருத்து பிரச்சாரம்!

ஒன்றிய பாஜக அரசின், "ஒரே நாடு, ஒரே தேர்தல்" வஞ்சகத் திட்டத்துக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய சென்னை மாவட்டத்தில் மக்கள் மன்றத்தில் கருத்து பிரச்சாரம் நடத்தப்பட்டது.
அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்ட குழுவின் பரிந்துரைகளை ஏற்று 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை  செப்டம்பர் 18-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் இந்த மசோதாவை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. 
நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடத்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட இருப்பது சட்டமன்றங்களும், நாடாளுமன்றமும் ஐந்தாண்டு காலம் பொறுப்பில் இருந்திட வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் அளித்திருக்கிற திட்ட வரையறையை மீறும் செயலாகும். மாநிலங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றங்களின் உரிமைகளைப் பறித்து, மையப் படுத்தப்பட்ட ஒற்றை ஆட்சி அமைப்பு முறையைக் கொண்டு வந்திடும். 
இந்த நிலையில், "ஒரே நாடு, ஒரே தேர்தல்" வஞ்சகத் திட்டத்துக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய சென்னை மாவட்டத்தில் மக்கள் மன்றத்தில் கருத்து பிரச்சாரம் நடத்தப்பட்டது.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதியில் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சிலைக்கு, மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி மாலை அணிவித்து தொடக்கிவைத்தார். உடன் மாவட்ட செயலாளர் ஜி.செல்வா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.முருகேஷ், பகுதி செயலாளர் ஆர்.கபாலி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.