சென்னை, ஜூலை 8- சென்னை மனநலக்காப்பகத்தின் இயக்குநர், மருத்துவர்கள், நோயாளிகள் உள்ளிட்ட 50 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு தகவலை வெளியிட நிர்வாகம் மறுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனை 225 ஆண்டுகள் பழமையானது. தற்போது 900 மனநோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்குள்ளவர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் இதுகுறித்து நிர்வாகம் ஊடகங்களுக்கு தகவல் அளிக்காமல் ரகசியம் காக்கிறது. மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் பூர்ண சந்திரிகா, காப்பகத்தின் தலைமை அதிகாரி ரவி உள்ளிட்ட 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்ட 30 மனநோயாளிகள் ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 6 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் செவிலிப் பணியாளர்களில் பலருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், சிகிச்சை முறைகள் குறித்து ரகசியம் பாதுகாக்கப்படுவதாகவும் தெரிகிறது. மருத்துவமனையில் போதிய அளவு செவிலியர்கள், மருத்துவர்கள், பணியாளர்கள் இல்லாத நிலையிலும், தற்போதுள்ளவர்கள் பணிச்சுமையோடு பணிபுரிகின்றனர். அவர்களுக்கு தேவையான உபகரணங்களை முழுமையாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த்துள்ளது. தங்களின் உடல் உபாதைகள் வெளிப்படுத்த இயலாத மனநோயாளிகளை காக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?