tamilnadu

தொடரும் பாலியல் வன்கொடுமைகள்

செங்கல்பட்டு,ஏப்.30-காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடரும்பாலியல் வன்கொடுமைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.சங்கர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவின் விவரம் வருமாறு:- காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நான்கு பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன. கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி, மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளி சிறுமியை ஆட்டோவில் கடத்திச் சென்று, சமுக விரோதிகள் 4 பேர்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதேபோல், கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி காஞ்சிபுரம் காவலான்கேட் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமியை கோடீஸ்வ ரன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஏனாத்தூர் பகுதியைச் சார்ந்த 7 வயது சிறுமியை முருகன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த மூன்று சம்பவங்களிலும் குற்றவாளிகள் மீது போக்சோ நட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்திரமேரூர் மாணம்பதி கண்டிகையைச் சேர்ந்த வேளாங்கண்ணி, அற்புதராஜ் ஆகியோர், சிறுமியை வீட்டு வேலைக்கு என அழைத்துச் சென்று காஞ்சிபுரம் கோனேரிகுப்பம் பகுதியில் வீடு எடுத்து, சிறுமிக்கு போதை மாத்திரை, ஊசி செலுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் வேளாங்கண் ணியை மட்டும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அற்புதராஜ் இதுவரை கைது செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்ட சிறுமி ஏழை கூலித் தொழிலாளி குடும்பத்தை சேர்ந்தவர். குற்றவாளிகள் இருவரும் அதே கிராமத்தில் ஆதிக்க குடும்பத்தைச் சார்ந்தவர்கள். முக்கிய குற்றவாளி ஒருவர் இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பதால் பாதிக்கப்பட்ட குடும்பம் மிகுந்த அச்சத்தில் உள்ளது.இந்த சம்பவத்தில் குற்றவாளிகளைத் தவிர்த்து வேறு சிலரும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற ஐயமும் உள்ளது.கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் செய்யூர் ஓதியூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட போலி சாமியார் சிறீதர் மீது மாதர் வாலிபர் சங்கத்தினர் புகார் கொடுத்தனர். ஆனால் குற்றவாளி கைது செய்யப்படவில்லை. குற்றவாளிகள் மீது காவல்துறை உரிய நடவடிக்கைஎடுக்காததால், தொடர் பாலியல் வன்முறைகள் நடைபெற்று வருகின்றன.பாலியல் வன்முறைச் சம்பவங்களுக்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், காவல் துறை தார்மீக பொறுப்பேற்க வேண்டும், குற்றவாளி அற்புதராஜ் உடனடியாக கைது செய்யப்படவேண்டும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு உரிய சிகிச்சையும், மனநல ஆலோசனையும் உரிய இழப்பீடும், பாதுகாப்பும் வழங்க வேண்டும், 6 மாதத்திற்குள் வழக்கை முடித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கும் வகையில் விசாரணையைத் துரிதப்படுத்திட வேண்டும்.பாலியல் குற்றச் சம்பவத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;