tamilnadu

img

உத்தேச மின் இணைப்பு கட்டண உயர்வை முழுமையாக கைவிடுக!

சென்னை:
தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் 2018-19ஆம் ஆண்டில் உத்தேசித்துள்ள மின் இணைப்புக் கட்டண உயர்வை முழுமையாக கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. அத்துடன் உத்தேச கட்டண உயர்வை தவிர்க்க வாய்ப்புள்ள மாற்று ஆலோசனைகளையும் கட்சி முன்வைத்துள்ளது. அந்த ஆலோசனைகள் கொண்ட கே.பாலகிருஷ்ணனின் கடிதத்தை கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில், கட்சியின் முன்னாள் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்  எஸ்.கே. மகேந்திரன் மற்றும் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.எஸ். சுப்பிரமணியன் ஆகியோர் புதனன்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவரை நேரில் சந்தித்து கடிதம் அளித்துள்ளனர். 

சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணனின் கடித விபரம் வருமாறு:
மின்துறை சேவைத் துறையாகும். தமிழக மின்சார வாரியத்தில் சுமார் 2,97,00,000 மின்நுகர்வோர்கள் உள்ள நிலையில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அத்தியாவசியமானது மின்சாரம், தொழில், விவசாயம், குடும்பத்தின் அத்தியாவசியச் சேவை ஆகியவற்றிற்கு அடிப்படையாக மின்சாரம் விளங்குகிறது.கிராம, நகர்ப்புற விரிவாக்கத்திற்கு ஏற்ப புதிய புதிய மின் இணைப்புகள் கோருவதும் அதை மின்வாரியம் அளிப்பதும் மின்வாரியத்தின் பணியாக உள்ளது.மின்துறை ஒரு அத்தியாவசியமான சேவைத் துறை என்பதை கணக்கில் கொள்ளாமல் மின்வாரியத்தின் வருவாயை மட்டும் கணக்கில் கொண்டு மின் இணைப்பு கட்டணங்களை உயர்த்துவதற்காக முன்வைத்துள்ள  ஆலோசனை சரியல்ல; மறுபரிசீலனை செய்திட வேண்டும் என குறிப்பிட விரும்புகின்றோம்.

உத்தேசித்துள்ள மின் இணைப்பு கட்டண உயர்வுகளை பார்க்கின்ற போது தற்போதுள்ள கட்டணத்தில் இருந்து 5 மடங்கு முதல் 8 மடங்கு வரை கட்டண உயர்வுக்கு திட்டமிடப்பட்டதில் இருந்து பல கோடி ரூபாயை மின்நுகர்வோர்கள் மீது மின்இணைப்புக் கட்டண சுமையாக சுமத்த உள்ளது என்பது பொருளாதார மந்தம், தொழில் நசிவு, விவசாயப் பாதிப்பு போன்றவைகளினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு மேலும் பொருளாதாரச் சுமையை சுமத்த உள்ளதாகவும், அபரிமிதமான கட்டணத்தை சுமக்க உள்ளவர்களுக்கு மட்டுமே மின்சாரம் என்ற நிலையை உருவாக்கிட வாய்ப்புள்ளது என்பதை குறிப்பிட விரும்புகின்றோம்.எனவே, பல ஆயிரம் கோடி ரூபாய் மின் இணைப்புக் கட்டணமாக உத்தேசிக்கப்பட்டுள்ளது, தமிழகத்தில் புதிய மின் இணைப்பு கோருபவர்கள், இணைப்பு பெயர் மாற்றம் செய்ய விரும்புபவர்கள், விரிவாக்கம் செய்ய விரும்புபவர்கள் ஆகியோரை கடுமையாகப் பாதிக்கும். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தேசித்துள்ள மின்இணைப்பு கட்டண உயர்வை முழுவதுமாக கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
(மேலும் விபரம் - பக்கம் 4)

;