சென்னை,செப்.22 சென்னை மெட்ரோ ரயில நிறுவனத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து காஞ்சிபுரத்தில் நடைபெற்ற சிஐடியு 14வது தமிழ்மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம் வருமாறு: சென்னையில் இயங்கி வரும் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைத்த காரணத்திற்காக இட்டுக் கட்டிய குற்றச்சாட்டுகளின் பேரில் நிர்வாகம் கடுமையான பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. 60க்கும் மேற்பட்டவர்களுக்கு ஊதிய உயர்வு வெட்டு, பணியிடை நீக்கம், வேலை தராமல் சும்மா உட்கார வைப்பது போன்ற அடக்குமுறைகள் தொடர்கின்றன. தொழிலாளர் துறை அதிகாரிகள் வழங்கிய ஏற்புடைய அறிவுரைகளை அமல்படுத்த மறுக்கிறார்கள். ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. ஏற்கனவே இருந்த விடுப்புகள் குறைக்கப்பட்டுள்ளது. நிலையாணை விதிகள் கூட மெட்ரோ நிறுவனத்திற்கு பொருந்தாது என்று நிர்வாகம் கூறுகிறது. நிரந்தரத்தன்மையுடைய வேலைகளில் சட்டவிரோதமாக ஒப்பந்த ஊழியர்களை ஈடுபடுத்துகிறார்கள். அவர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் என்பதும் அமல்படுத்தப்படவிலலை. அடுக்கடுக்கான சட்டவிரோத நடவடிக்கைகளில் மெட்ரோ நிறுவனம் ஈடுபட்டு வருவதை மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. தொழிலாளர் துறைக்கு செய்யப்படும் புகார்கள் பெரும்பாலும் பலனற்றதாகவே உள்ளது. அனைத்து பழிவாங்குதல்களையும், சட்டவிரோத நடவடிக்கைகளையும் கைவிட்டு அனைவருக்கும் பின்தேதியிட்டு வேலையும் ஊதியமும் வழங்க வேண்டும். சங்கம் சேரும் உரிமை மற்றும் கூட்டுபேர உரிமைகளுக்கு எதிராக செயல்படும் நிறுவனங்களையும், வேடிக்கை பார்க்கும் அரசையும் எதிர்த்து அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்டு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென சிஜடியு 14ஆவது தமிழ் மாநில மாநாடு கோருகிறது. இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.