நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க, சென்னை வந்திருந்த ஜனாதிபதியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் வழங்கி வலியுறுத்தல்!
நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய்ந்து, மாற்றுவழிகளைச் செயல்படுத்துவதற்குத் தேவையான பரிந்துரைகளை அரசுக்கு வழங்கிட நியமிக்கப்பட்ட திரு. ஏ.கே. இராஜன் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையிலும், பல்வேறு விவாதங்கள் நடத்தப்பட்டும்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 13-9-2021 அன்று 'தமிழ்நாடு இளநிலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை சட்டமுன்வடிவு, 2021 (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 43/2021) நிறைவேற்றப்பட்டு, தமிழ்நாடு ஆளுநருக்கு 18-9-2021 அன்று அனுப்பப்பட்டது.
தற்போது சட்டமுன்வடிவு தமிழ்நாடு ஆளுநர் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு, ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது.
நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவிற்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்டுள்ள அதீத காலதாமதம், அதிக கட்டணங்களைச் செலுத்தி பயிற்சி பெற முடியாத, பல தகுதி வாய்ந்த மாணவர்களின் மருத்துவ சேர்க்கையைப் பறித்துள்ளது.
இந்த உணர்வுப்பூர்வமான பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு, தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு, மேலும் தாமதமின்றி உடனடியாக ஒப்புதல் அளித்து தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காத்திட வேண்டும் எனக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.