சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி மாணவி ஒருவர் சக மாணவர்களால் 2017ஆம் ஆண்டிலிருந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து புகார் தெரிவித்த மாணவியை, பேரா.எடமன பிரசாத் சாதி ரீதியாக, அவமானப்படுத்தி, தொடர் தொந்தரவு கொடுத்துள்ளார். எனவே உள்புகார் கமிட்டியில் மாணவி புகார் செய்தார். விசாரணையில், குற்றம் நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில், குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் கல்வி வளாகத்திற்குள் வர தடை விதிக்கப்பட்டது. ஆனால், குற்றவாளிகள் அனைத்து ஆன்லைன் வகுப்புகளிலும் கலந்து கொண்டிருந்தனர். இதனால் மன உளைச்சல் அடைந்த மாணவி 3 முறை தற்கொலைக்கு முயற்சிக்கு தள்ளப்பட்டுள்ளார்.
தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி), சென்னை காவல் துறை ஆணையர், எஸ்சி, எஸ்டி ஆணைய தலைவர் உள்ளிட்டோருக்கு மாணவி புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பின்னர், தேசிய மகளிர் ஆணைய தலையீட்டிற்கு பிறகு, மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்தில் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கிங்ஷூக்தேப் ஷர்மா, சுபதீப் பானர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ, முனைவர் ரவீந்திரன், பேரா.எடமன பிரசாத், நாராயண் பத்ரா, சௌர்வதத்தா, அயன் பட்டாச்சார்யா ஆகிய 8 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது.
இதையடுத்து, கடந்த மார்ச் 25ஆம் தேதி தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமாரியை ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.சுகந்தி, மாநிலச் செயலாளர் வி.பிரமிளா ஆகியோர் சந்தித்து புகார் அளித்ததுடன் இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, மயிலாப்பூர் காவல் துணை ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுவந்த போலீசார் கொல்கத்தாவில் தலைமறைவாக இருந்த கிங்ஷூக்தேப் ஷர்மாவை போலீசார், கடந்த மார்ச் 28ஆம் தேதி கைது செய்த நிலையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவர் ஏற்கனவே முன்ஜாமீன் பெற்ற உத்தரவை காண்பித்த நிலையில் அவரை நீதிமன்றம் விடுதலை செய்தது.
இந்நிலையில், சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சென்னை மயிலாப்பூர் காவல்துறையிடமிருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.