ஏடிஎம் மையத்தை உடைக்க முயற்சி
செங்குன்றம், மே 25-செங்குன்றத்தை அடுத்த காந்திநகரில் அரசு மற்றும் தனியார் வங்கி ஏ.டி.எம். மையங்கள் அடுத்தடுத்து உள்ளன. நள்ளிரவில் மர்ம கும்பல் ஒன்று ஏ.டி.எம். மையத்தினுள் புகுந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். இரும்பு கம்பியைக் கொண்டு முயன்றனர்.முதலில் மையத்தில் புகுந்து பணத்தை எடுக்க முயற்சி செய்து அது பலன் அளிக்கவில்லை.அதனையடுத்து மற்றொரு ஏ.டி.எம். மையத்தில் கைவரிசை காட்டினர். எந்திரத்தை உடைக்க முயன்றபோது அலாரம் திடீரென சத்தம் போட்டது. திடீரென அபாய சத்தம் கேட்டதால் அந்த பகுதியிலிருந்த சிலர் ஓடி வந்தனர். பொதுமக்கள் வருவதை அறிந்ததும் கொள்ளை கும்பல் தப்பி ஓடியது. ஒரே நேரத்தில் 2 ஏ.டி.எம்.களிலும் கொள்ளை முயற்சி நடந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.சோழவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஏ.டி.எம்.களில் உள்ள கேமிராவில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி இருக்கிறதா? என ஆய்வு செய்து வருகின்றனர். அலாரம் ஒலித்ததால் பல லட்சம் ரூபாய் வங்கி பணம் தப்பியுள்ளது.
திருவள்ளூர் அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
திருவள்ளூர், மே 25-திருவள்ளூர் அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவள்ளூரை அடுத்த திருகோவில்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நாதமுனி. விவசாயி. இவரது மனைவி அனிதா (49). இவர் வீட்டின் அருகே உள்ள கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க தாலி சரடு மற்றும் செயினை 2 பேர் பறித்தனர். இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். திருடன்... திருடன்... என கூச்சலிட, அந்த 2 பேரும் பைக்கில் தப்பி ஓடினார்கள். அனிதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அனிதா சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, செயினை பறித்த கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.