tamilnadu

img

சிந்தனையாளர் ஆனந்த், பத்திரிகையாளர் கௌதம் நவ்லேகாவை கைது செய்யும் எண்ணத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்

தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் கோரிக்கை

சென்னை, ஏப்.14.

சிந்தனையாளரும், பேராசிரியருமான  ஆனந்த் டெல்டும்டே மற்றும் மனித உரிமை ஆர்வலரும், பத்திரிகை ஆசிரியருமான கௌதம் நவ்லேகா ஆகிய இருவரையும் சிறைப்படுத்தும் எண்ணத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க (டி.யூ.ஜே.) மாநில தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

உலகறிந்த சிந்தனையாளர் பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே  மற்றும் மனித உரிமை ஆர்வலரும் எகனாமிக் அண்டு பொலிட்டிக்கல் வீக்லி    இதழின்  ஆசிரியருமான  கௌதம் நவ்லேகா ஆகிய இருவரையும் சிறைப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இதற்கு உலகம் முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. ஏற்கனவே 600க்கும் மேற்பட்ட சர்வதேச அறிஞர்கள், சிந்தனையாளர்கள்  பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே-க்கு  ஆதரவாக தங்கள் கருத்துகளை  ஒரு கூட்டறிக்கையின் வாயிலாக தெரிவித்திருந்தனர்.

விமர்சனங்களை, மாறுபட்ட கருத்துக்களை, சமூக உரிமைக்கான போராட்டங்களை,  ஒடுக்குவது,  நசுக்குவது பாசிச குணங்களில் ஒன்றாகும்.

இப்போக்கை எதிர்ப்பதில் மக்கள் மற்றும் அமைப்புகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டிய  தேவையும்  கட்டாயமும்  இன்று எழுந்துள்ளது.  இந்திய பார்லிமென்ட் ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்று இதழியல் துறையாகும்.

இந்திய இதழியல் துறைக்கு இன்று ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. ஆயினும் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் தனது பொறுப்பை நன்கு உணர்ந்தே உள்ளது.

சட்ட மேதை  மாபெரும் சமூக சிந்தனையாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் எப்படியாவது  இவர்களை கைது செய்து விடவேண்டும் என மராட்டிய அரசும், மத்திய அரசும் முனைப்பில் உள்ளன.  பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே  மற்றும் மனித உரிமை ஆர்வலர்  கௌதம் நவ்லேகா இருவரையும் சிறைப்படுத்தும் முயற்சிகளையும் இம் முயற்சிகளுக்கு  பின்புலமாக இருக்கும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான மத்திய, மராட்டிய அரசுகளின் வன்மத்தையும் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் எதிர்க்கிறது. வன்மையாக கண்டிக்கிறது.

இவர்களை பழிவாங்க வேண்டும்,  சிறையிலடைத்து வெளியில் வர முடியாத   குற்றச்சாட்டுகளில் நீண்ட நாள் சிறையில்  வைக்க வேண்டும்  என்ற  மனித உரிமைகளுக்கு  எதிரான நடவடிக்கைகளை கைவிட வேண்டும் எனவும் டி.யூ.ஜே. கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்க மாநில தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் கூறியுள்ளார்.