tamilnadu

img

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் கட்டண நிர்ணயக்குழு தேவை

சென்னை:

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் கட்டண நிர்ணயக் குழு மூலமே கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என மாணவர் பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச்சங்கம் சார்பில் தலைவர் செ.அருமைநாதன், பொதுச் செயலாளர் நா.வீரபெருமாள், பொருளாளர் எஸ்.ஜாகிர் உசேன் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் உள்ள பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:


சிபிஎஸ்இ பள்ளிகளில் 25 விழுக்காடு ஒதுக்கீடு

சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 விழுக்காடு ஒதுக்கீடு இடங்களின் விவரமும், அதற்கு விண்ணப்பிக்கும் முறையும், அரசு இணையதள வழியில் ஏற்பாடு செய்துள்ளதால் எளிதாக விண்ணப்பித்து பெற்றோர்கள் பயனடைந்து வருகிறார்கள். ஆனால் சிபிஎஸ்இ பள்ளிகளின் 25 விழுக்காடு ஒதுக்கீடு இடங்கள் குறித்த விவரங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட வில்லை. இதனால் பெற்றோர்கள் விவரம் அறிய முடியாமலும், விண்ணப் பிக்க முடியாமலும் அவதிப்பட்டு வரு கிறார்கள். மேலும், தகுதியுடைய குழந்தைகள் அருகில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர்ந்து பயனடைய முடியாத நிலையும் உருவாகியுள்ளது. எனவே விண்ணப்பிக்க கடைசி நாளான மே 18ஆம் தேதிக்குள் சிபிஎஸ்இ பள்ளிகளின் 25 விழுக்காடு ஒதுக்கீடு இட விவரங்களை அரசு இணையதளத்தில் வெளியிட வேண்டும்.


 கட்டணம் நிர்ணயம் செய்க!

தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழு, சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் கட்ட ணம் நிர்ணயம் செய்து வந்தது. அந்த பள்ளிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்த பள்ளிகளுக்கு கட்டணக்குழு கட்டணம் நிர்ணயம் செய்யக்கூடாது எனவும் அந்த பள்ளிகளே கட்டணம் நிர்ணயம் செய்து கொள்ளலாம் எனவும் 28.1.2016இல் இடைக்கால தீர்ப்பு பெற்றுவிட்டனர். கட்டணக்குழு மூலம் கட்டணம் நிர்ண யம் செய்யப்பட்ட போதே அந்த பள்ளிகள் நிர்ணயம் செய்ததை விட பல மடங்கு கூடுதலாக வசூலிப்பதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்து வந்தனர். தற்போது அந்த பள்ளி கள் எந்த வரைமுறையும் இன்றி விருப்பம் போல் கட்டணம் வசூலித்து வருகிறார்கள். எனவே உச்சநீதி மன்றத்தில் வலுவாக வாதாடி, சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் கட்டணக் குழுவே கட்டணம் நிர்ணயம் செய்யும் உரிமையை பெற்றுத்தர வேண்டும். 


மாணவர் சேர்க்கைக்கு நன்கொடை கூடாது

கல்வி உரிமைச் சட்டப்படி, பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு எந்தவித நன்கொடையும் வசூலிக்கக் கூடாது. அவ்வாறு நன்கொடை வசூலிக்கப் பட்டால், வசூலிக்கப்படும் தொகையை போல் 10 மடங்கு அபராதம் விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான தனியார் பள்ளிகளில் வெளிப்படையாகவே மாணவர் சேர்க்கையின் போது, பெரும் தொகை நன்கொடையாக வாங்கப்படுவதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள். ஆகவே மாணவர் சேர்க்கையின் போது சிறப்புக் குழு அமைத்து (பறக்கும் படை) சோதனை மேற்கொண்டு தவறு செய்யும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 


எண்ணிக்கையை கட்டுப்படுத்துக!

அரசுப்பள்ளிகளை வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது பாராட்டுக்குரிய விஷயம். அதேசமயம் தனியார் பள்ளி களை துவக்க அரசு தாராளமாக அனுமதியும் அளித்து வருகிறது. இதனால் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையும், அதில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும், வருடா வருடம் கூடிக் கொண்டே போகிறது. எனவே தனியார்பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கு வதை நிறுத்தி அதன் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.