மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: திருவாரூர் மாவட்டம் திருராமேஸ்வரம் கிராமம் கோட்டகச்சேரி பகுதியிலுள்ள கோவில் திருவிழாவிற்கு, விளம்பரப் பதாகைகள் வைப்பதற்காக கடந்த 29ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் அக்கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் மதன்ராஜ் என்பவர், விளம்பரப் பதாகைகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அருகிலுள்ள மின்மாற்றியில் இரும்பு கம்பியுடன் கூடிய விளம்பர பதாகையில் உராய்வு ஏற்பட்டு, மின்சாரம் தாக்கியது. இதில் பலத்த காயம் ஏற்பட்ட மதன்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில், மதன்ராஜ் உயிரிழந்த இந்த துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் ரூபனுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ரூ. 2 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவனின் பெற்றோருக்கு ரூ. 50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளதாகவும், அதில் கூறப்பட்டுள்ளது.