tamilnadu

img

பதட்டத்தை அதிகரிக்கும் பாஜகவின் பந்த்! - மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம்

சென்னை, அக்.27- பதட்டத்தை போக்குவதற்குப் பதிலாக அதை அதிகரிக்கும் வேலையில் பாஜக இறங்கியுள்ளது என தமிழக மக்கள் ஒற்றுமை மேடை விமர்சித்துள்ளது.

குறித்து தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர்கள் பேரா.அருணன் மற்றும் க.உதயகுமார் விடுத்துள்ள அறிக்கை வருமாறு;

கோவையில் கார் ஒன்றில் சிலிண்டர் வெடித்ததில் அதிலிருந்த ஒருவர் மாண்டு போனார். இது தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் வற்புறுத்தியுள்ளனர்.

கோவை ஆட்சியரை சந்தித்த ஜமாத் தலைவர்களும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளனர்; நகரில் அமைதியைப் பேணத் தாங்கள் முழு ஒத்துழைப்புத் தருவதாகக் கூறியுள்ளனர். நிலைமையை உயர் காவல்துறை அதிகாரிகளோடு ஆய்வு செய்துள்ளார் தமிழ்நாடு முதல்வர். அதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தை என்ஐஏ அமைப்பு விசாரிக்க அரசு பரிந்துரை செய்துள்ளது.

விஷயம் இப்படி அரசால் கையாளப்பட்டு வரும்போது இதற்குள் புகுந்து மதப் பதட்டத்தை உருவாக்கப் பார்க்கிறது பாஜக. இந்த நிகழ்வுக்கு மதச்சாயம் பூசி, பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது! எதற்கு இந்தப் போராட்டம், யாருக்கு எதிராகப் போராட்டம் எனும் கேள்விகள் எழுகின்றன.

கார் சிலிண்டர் வெடிப்பால் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அச்சத்தை, பதட்டத்தை போக்குவதற்குப் பதிலாக அதை அதிகரிக்கும் வேலையில் பாஜக இறங்கியுள்ளது. இதைத் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வன்மையாகக் கண்டிக்கிறது. மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றிக் கவலைப்படாது மதப்பகைமையை உருவாக்குவதே பாஜகவின் அரசியல்.

நாடு முழுக்க மட்டுமல்ல கோவையிலும் இதுவே அவர்களின் வரலாறு. இதை மனதில் கொண்டு பாஜகவின் மதவெறி அரசியலுக்கு இடம் தர வேண்டாம், மாவட்டத்தில் மத நல்லிணக்கத்தை - சுமூக வாழ்வைப் பேணிக் காக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களையும் மேடை அன்போடு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.