tamilnadu

தொலைதூரக்கல்வியில் பிஎட்: விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை:
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் பி.எட். சிறப்புக் கல்வி பட்டப்படிப்புக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ரத்தினகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக பி.எட். சிறப்புக் கல்வி பட்டப்படிப்புக்கான சேர்க்கை அக்டோபர் 1ஆம் தேதி முதல் தொடங்குகிறது.தமிழ்நாட்டில் 2008ஆம் ஆண்டு முதல் பி.எட். சிறப்புக் கல்வி பட்டப்படிப்பை தொலைதூரக்கல்வி வாயிலாக நடத்திவரும் ஒரே பல்கலைக்கழகம் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம். இந்தப் படிப்பினை தென்னிந்திய அளவில் வழங்கிவரும் இரண்டு பல்கலைக் கழகங்களில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஒன்றாகும்.

இந்தப் படிப்பானது பல்கலைக்கழக மானியக்குழு, இந்திய மறுவாழ்வு கழகத்தின் அங்கீகாரத்துடன் நடத்தப்படுகிறது.இந்தப் படிப்பினை முடிப்பதன் மூலம் அரசின் பொது, சிறப்பு பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளிலும் சிபிஎஸ்இ (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) பள்ளிகளிலும் ஆசிரியர்களாகப் பணியாற்றலாம்.பி.எட். சிறப்புக் கல்வி பட்டப்படிப்பு பார்வை குறைபாடு, செவித்திறன் குறைபாடு, அறிவுத்திறன் குறைபாடு ஆகிய பிரிவுகளில் வழங்கப்படுகிறது.தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் இந்தப் படிப்பினை அரசு, இந்திய மறுவாழ்வுக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற தமிழ்நாடு முழுவதும் பரவலாக அமைந்துள்ள 10 கல்வி மையங்கள் வாயிலாகவும் நடத்தி வருகிறது.2021ஆம் ஆண்டிற்கான பி.எட். சிறப்புக் கல்வி பட்டப்படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பப்படிவம், விளக்க கையேட்டை அக்டோபர் 1ஆம் தேதி முதல் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வெளியிடுகிறது.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் www.tnou.ac.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி அக்டோபர் 31 ஆகும். இந்தச் சிறப்பு பட்டப் படிப்பில் சேர்வதற்கு பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்ச்சி செய்தபின்னர் பல்கலைக்கழக மானியக்குழுவின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு தகுதி பெற்றிருக்க வேண்டும்.இந்தப் படிப்பானது தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கற்பிக்கப்படும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.