tamilnadu

img

சரவெடி பட்டாசுகளை தவிர்க்கலாம் - தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

அதிக ஒலி எழுப்பும்  பட்டாசுகளையும், தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்த்திடலாம், மருத்துவமனைகள், வழிபாட்டு தளங்கள் உள்ளிட்ட அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகளை வெடிப்பது தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது. அரசு அனுமதித்த நேரங்களில் மட்டுமே வெடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

தீபாவளி பண்டிகை வருகிற 14 ஆம் தேதி நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிப் பண்டிகை என்றாலே பட்டாசு வெடித்துக் கொண்டாடும் சூழலில் அண்மைக்காலமாக சுற்றுச்சூழல் நலன் கருதி பட்டாசு வெடிப்பதற்கு சில மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதனால், அந்த தொழிலை நம்பி இருப்பவர்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடுகிறது. இதனிடையே, நாடு முழுவதும் வருகிற 7ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கலாமா என்று கேட்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சுற்றுச்சூழல் நலன் கருதி தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தீபாவளியன்று காலை 6 முதல் 7 வரையிலும், இரவு 7 முதல் 8 வரையிலும் பட்டாசுகள் வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில் பட்டாசு வெடிப்பது தொடர்பாக தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுவதாக கூறி பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த பொது நல வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் தனது 23.10.2018 ஆம் நாளிட்ட ஆணையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும் வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்தது. மேலும், மாண்புமிகு உச்ச நீதிமன்றம் தனது ஆணையில், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்தவெளிகளில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த 2018 மற்றும் 2019 ஆண்டு தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல்7 மணிவரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையன்றும், கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் எனத் கூறியுள்ளது. 

பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொது மக்கள் கடைபிடிக்க வேண்டியவை:

பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசு படுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்த அந்த பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம். அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்

3 குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் ஆகவே, பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.