tamilnadu

அழகு நிலையத்தில்  கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்த 6 பேர் கைது

 சென்னை, ஜூலை 18-  திருவல்லிகேணியை சேர்ந்தவர் சரவணன். இவர் நீலாங்கரையை அடுத்த வெட்டுவாங்கேணி காமராஜ் நகரில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அழகு நிலையத்துக்குள் 2 வாலிபர்கள் வந்து வரவேற்பு பகுதியில் இருந்த பெண்ணிடம் கட்டண விவரங்களை கேட்டுவிட்டுச் சென்றனர். பின்னர் அந்த 2 வாலிபர்களுடன் 4 பேர் திடீரென அழகு நிலையத்துக்குள் புகுந்தனர். அவர்கள் திடீரென வரவேற்பு பகுதியில் இருந்த பெண்ணை கத்தியை காட்டி மிரட்டினர். அப்பெண் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் செயினையும், ரூ.7 ஆயிரத்தையும் பறித்துக் கொண்டு 2 வாலிபர்கள் மட்டும் தப்பிச் சென்றனர். மற்ற 4 பேரும் அழகு நிலையத்தில் மேலும் பணம் கேட்டு மிரட்டிக் கொண்டிருந்தனர். அப்போது ஜீவா என்பவர் சத்தம் கேட்டு அங்கு வந்தார். அழகு நிலையத்துக்குள் மர்ம கும்பல் பெண்ணை மிரட்டி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அழகு நிலையத்தின் கதவை பூட்டிவிட்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். பின்னர் காவல்துறையினர் விரைந்து சென்று அழகு நிலைய கதவை திறந்து உள்ளே சென்று கொள்ளையில் ஈடுபட்ட 4 வாலிபர்களை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தி னர். விசாரணையில் அவர்கள் காஞ்சிபுரத்தை சேர்ந்த தர்மா, திருவான் மியூரை சேர்ந்த குமரன், சின்ன நீலாங்கரை குப்பம் பகுதியை சேர்ந்த பிரபாகரன், சூரியா என்பது தெரியவந்தது. பணம், நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடியது பள்ளிக்கரணையை சேர்ந்த சதீஷ், வெட்டுவாங்கேணியை சேர்ந்த விக்னேஷ் என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் கல்லூரி மாணவர்கள் ஆவார்கள். அவர்களை யும் காவல்துறையினர் கைது செய்து நகை-பணத்தை மீட்டனர்.