செங்கல்பட்டு, ஜூலை 4- செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம் வடபட்டினம் ஊராட்சிக் குட்பட்ட ஏரிக்கரை பகுதியில் 21 குடும்பங்களைச் சேர்ந்த பழங்குடி இருளர் இன மக்கள் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் கிடைக் கும் விவசாய நிலங்களில் மரம் வெட்டு தல் உள்ளிட்ட கூலி வேலைகளை செய்து வாழ்க்கை நடத்தி வருகின்ற னர். இவர்களுக்கு நிரந்தர வீடுகள் எதுவும் இல்லாத நிலையில் குடிமனை பட்டா வழங்கி வீடு கட்டி தர வேண்டுமென மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் தொடர்ந்து பல போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் 2022- 23 நிதி ஆண்டில் அம்மக்களுக்கு நிரந்தர வீடு கட்டி தருவதற்காக வடபட்டினம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள தோப்பு புறம்போக்கு இடத்தில் வகை மாற்றம் செய்து பட்டா வழங்கி வீடு கள் கட்டுவதற்கு ஆணைகள் வழங்கப் பட்டன. ஒதுக்கப்பட்ட இடத்தில் வீடு கட்டு வதற்கான பணிகளும் ஒப்பந்ததாரர் மூலமாக தொடங்கப்பட்ட நிலை யில் கட்டுமான பணிகள் தரமற்ற நிலையில் இருப்பதாக பயனாளி களான பழங்குடி இருளர் மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்ற னர்.
மேலும் சில நாட்களுக்கு முன்னர் கட்டப்பட்ட வீடுகள் இடிந்து விழுவதாகவும் கட்டும்போதே சுவர்களில் விரிசல் ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 24 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள் இந்த கோரிக்கைகளை ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டுசென்றனர். இந்நிலையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் இடத்தை சென்று பார்த்தபோது கட்டப்பட்டிருந்த வீடுகள் சிலவற்றில் சுவர்கள் இடிந்து விழுந்து இருப்பதை காண முடிந்தது. வீடுகளில் சிமெண்ட் கலவை போதிய அளவு வைத்து கட்டிடங்களை கட்டாத காரணத் தினால் கையால் சுரண்டும் போதே சிமெண்ட் பூச்சுக்கள் பெயர்ந்து கொட்டுவதை காண முடிந்தது.
இதுகுறித்து பயனாளிகளில் ஒருவரான மஞ்சுளா கூறுகையில் வீடு கட்டுமான பணி நடைபெறும் போதே சுவர் இடிந்து விழுகிறது. தரமற்ற இந்த வீடுகளில் எப்படி நாங்கள் குழந்தை குட்டிகளுடன் குடியேறி வாழ்க்கை நடத்துவது என்று தெரியவில்லை. அரசு கட்டிக் கொடுக்கும் இந்த வீடு வாழ்வதற்கா அல்லது சாவதற்கா என்று மரணபயத்தோடு இருக்க வேண்டுமா என்று கேள்வி எழுப் பினார். பலவீனமான வீடுகளை இடித்து தள்ளிவிட்டு தரமான வீடு களை கட்டி தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.
கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் இடத்தின் மேற்பார்வை யாளரிடம் இது குறித்து கேட்டபோது கட்டுமான பணிகள் தரமற்ற நிலை யில் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்த வுடன் அதிகாரிகள் ஆய்வு செய்து ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை மூன்று மாதங்களுக்கு முன்னரே ரத்து செய்துவிட்டனர்.
தற்போது வட்டார வளர்ச்சி அலுவலக பொறியாளர் மேற்பார்வை யில் பணிகள் நடைபெற்று வருவதாக வும் தெரிவித்தார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக இந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து பழங்குடி இருளர் மக்களுக்கு தரமான வீடுகளை கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மக்களின் வரிப்பணத்தில் அரசு செய்கிற நலத் திட்டங்கள் யாவும் ஒருசில தவறான அதிகாரிகளால் தரமற்று போகிறது. இவற்றை மாவட்ட நிர்வாகம் உடனே ஆய்வு செய்து தரமற்ற கட்டுமானம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். - க.பார்த்திபன்