tamilnadu

img

பல்வேறு திட்டங்களுக்கு நிலங்களை வழங்கிய விவசாயிகளை சுயநலவாதிகள் என்பதா? முதலமைச்சரின் பேச்சுக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்

சென்னை:
தமிழ்நாட்டில் மக்கள் நலன்சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு விவசாயிகள் மனமுவந்து நிலங்களை வழங்கியுள்ளனர். ஆனால் திருப்பூரில் உயர் மின்கோபுரம் அமைக்க  நிலம் தராமல் விவசாயிகள் சுயநலத்தோடு நடந்து கொள்கிறார்கள் என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் மாநில தலைவர் வி.சுப்பிரமணியன் தலைமையில் நவம்பர் 8  அன்று இணையவழியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில பொதுச்செய லாளர் பெ.சண்முகம் பொருளாளர் கே.பி.பெருமாள்  உட்பட மாநிலக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.  

நவ.26 வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு
மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் விரோத சட்டங்களையும், தொழிலாளர் நலனுக்கு விரோதமான சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் நவம்பர் 26 ஆம் தேதி பொது வேலைநிறுத்தம் செய்திட அனைத்து தொழிற்சங்கங் களும் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.  அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆதரிப்பதுடன் நவம்பர் 27 ஆம்தேதி நாடாளுமன்ற முற்றுகை போராட்ட த்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது.தமிழ்நாட்டில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அகில இந்திய விவசாயிகள் போராட்டஒருங்கிணைப்புக் குழுவுடன் இணைந்து நவம்பர் 26 ஆம் தேதி கிராமப்புறங்களில் பொதுவேலை நிறுத்தத்தை மேற்கொள்வதுடன், பல நூற்றுக்கணக்கான இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதென்று மாநிலக்குழு தீர்மானிக்கிறது. விவசாயிகளின் வாழ்வை அடியோடு அழிக்கும் வேளாண் விரோத சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற்றே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை உருவாக்கிடும் வகையில் ஆயிரமாயிர மாய் விவசாயிகள் பங்கேற்பதுடன், இப்போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உட்பட பங்கேற்குமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.

கோவை மாவட்டம் இருகூரிலிருந்து - பெங்களூர் தேவனகுந்தி வரை திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஆறு மாவட்டங்களில் வேளாண் விளை நிலங்களில் பெட்ரோலிய குழாய் பதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விவசாய நிலங்களுக்கு பதிலாக சாலையோர மாக குழாய் பதிப்பு திட்டத்தை செயல்படுத்தவேண்டுமென்று விவசாயிகள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். நில உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் இத்திட்டத்திற்கு நிலத்தை தர விருப்பமில்லை என்று தனித்தனியாக தங்களது ஆட்சேபணையை மாவட்ட ஆட்சியர்களிடம் தெரிவித்துள்ளனர்.

மாநில உரிமையில் அத்துமீறும் மத்திய அரசு
இந்த நிலையில், ஆகஸ்ட் 24 ஆம் தேதி மத்திய அரசிதழில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, நல்லம்பள்ளி ஆகிய தாலுக்காவுக்குட்பட்ட பல நூற்றுக்கணக்கான விவசாயிகளின் நிலங்களை இத்திட்டத்திற்காக அரசு எடுத்துக் கொண்டதாக மத்திய அரசுவெளியிட்டுள்ளது. மத்திய அரசின் சட்டவிரோதமான அடாவடித்தனமான இந்நடவடிக்கையை மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.மத்திய அரசு, நேரடியாக நிலம் தொடர்பான பிரச்சனையில் மாநில அரசின் அனுமதியை பெறாமல் இவ்வாறு கையகப்படுத்திக் கொண்டிருப்பது மாநில உரிமையில் அத்துமீறி செயல்படுவதையே வெளிப்படுத்துகிறது.எனவே, நிலம் தொடர்பான பிரச்சனையில் மத்தியஅரசு தன்னிச்சையாக மத்திய அரசிதழில் வெளியிட்டிருக்கும் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று தமிழக அரசு, மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் நிலத்தைகையகப்படுத்தும் செயலை கண்டித்து நவம்பர் 30 ஆம் தேதி ஐ.டி.பி.எல். திட்டத்தால்பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறவுள்ள போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முழுமையாக பங்கேற்கிறது.

விவசாயிகள் மீது பழிசுமத்தும் முதல்வருக்கு கண்டனம்
தமிழக முதலமைச்சர் சமீபத்தில் திருப்பூரில் உயர் மின்கோபுரம் அமைக்க விவசாயிகள் நிலம் தராமல் சுயநலத்தோடு நடந்து கொள்கிறார்கள். வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு மின்சாரம் கொண்டு வருவதற்காகத்தான் இந்த உயர்மின் கோபுரம் அமைக்கப்படுகிறது என்று தவறான தகவலை கூறியுள்ளதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.தமிழ்நாட்டில் மக்கள் நலன்சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு, தொழிற்சாலைகளுக்கு, நான்கு வழிச்சாலைகள் அமைப்பதற்கு விவசாயிகள் நிலத்தை மனமுவந்து அளித்திருக்கிறார்கள் என்பதை முதலமைச்சர் மறந்து விட்டு பேசுகிறார். உயர்மின் கோபுர விஷயத்தில் அமைக்கப்பட்ட உயர்மின் கோபுரங்களுக்கு செல்போன் டவருக்கு வழங்குவது போல் மாதவாடகை வழங்க வேண்டும். கேபிள் மூலம் மின்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும் என்ற விவசாய சங்கங்களின் கோரிக்கை குறித்து எதுவும் பேசாமல் விவசாயிகள் சுயநலக்காரர்களாக இருக்கிறார்கள் என்று பழிசுமத்தியிருப்பது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். மாற்று கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்காமலேயே மத்திய - மாநில அரசுகள் அடம்பிடித்து வருகிறது. எனவே முதல்வர்  விவசாயிகளை குற்றம் சொல்வதைவிட்டு விட்டு, விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்துஅரசு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.