tamilnadu

img

மசூதியில் நடைபெற்ற இந்து பெண்ணின் திருமண வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி!

கேரளாவில் 3 ஆண்டுகளுக்கு முன்பு மசூதியில் நடைபெற்ற, இந்து இணையரின் திருமண காணொளியை பகிர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மனித குலத்தின் மீதான அன்பு நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள ’தி கேரளா ஸ்டோரி’ படத்தின் ட்ரெய்லர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. கேரளாவைச் சேர்ந்த 32,000 இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு , ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவது போன்று அந்த ட்ரெய்லரின் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த ட்ரெய்லர் கடும் விமர்சனத்திற்கும், எதிர்ப்பிற்கும் உள்ளானது.

மதச்சார்பின்மையை கொண்ட கேரளாவில் திட்டமிட்டு பிரிவினையை தூண்டும் விதமான தி கேரளா ஸ்டோரி ட்ரெய்லர் அமைந்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், காம்ரேட் ஃபரம் கேரளா என்ற ட்விட்டர் பக்கத்தில் மற்றொரு கேரளா ஸ்டோரி என்ற தலைப்பிட்டு காணொளி ஒன்று பதியப்பட்டுள்ளது.

அந்த காணொளியில், 3 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சேரவல்லி முஸ்லீம் ஜமாத் பள்ளிவாசலில் சரத் சசி மற்றும் அஞ்சு அசோக் தம்பதிகளுக்கு நடைபெற்ற திருமணம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தை மணப்பெண்ணின் பெற்றோர் பள்ளிவாசல் நிர்வாகத்தை நாடியுள்ளனர். இதையடுத்து, நிர்வாகம் சார்பில் 10 சவரன் நகையும், ரூ.20 லட்சம் ரொக்கப்பணம் கொடுக்கப்பட்டதுடன், மசூதியிலேயே இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில், காம்ரேட் ஃபரம் கேரளா பக்கத்தில் பதிவிட்ட காணொளியை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் அவர், ”மனிதகுலத்தின் மீதான அன்பு நிபந்தனையற்றதாகவும், குணப்படுத்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும்’ என பதிவிட்டுள்ளார். மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக தி கேரளா ஸ்டோரி கருத்துகளை விதைக்கும்  சூழலில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ட்வீட் கவனம் பெற்றுள்ளது.