சென்னை:
தமிழ்நாட்டில் இனி அனைத்து விமான நிலையங்களிலும் தமிழில் அறிவிப்புகள் வெளியாகும் என தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தில்லிக்கு இரண்டு நாள் பயணமாக சென்ற தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அங்கு மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரியை சந்தித்துப் பேசினார். பின்னர் தமிழ்நாட்டுக்கு திரும்பிய அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளருக்கு பேட்டியளித்தார்.அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் தமிழில் அறிவிப்பு செய்ய வேண்டும் என ஒன்றரை ஆண்டுகளாக கோரிக்கை வைத்திருந்தேன். இது குறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சரிடம் பேசினேன்.விமான நிறுவனங்கள் 3 மொழிகளில் அறிவிப்பு செய்வது குறித்து சிரமப்பட்டனர்.பிரதமர் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் தமிழில் அறிவிப்பு செய்யப்படும் என்றார். முதலமைச்சரும் பல முறை இதுகுறித்து வலியுறுத்தினார். இதற்கான அரசாணை தற்போது வெளியிடப் பட்டு உள்ளது” என்றார்.இந்தத் தாமத்ததிற்கு அலுவல் மற்றும் ஆட்சி மொழி அமல்படுத்தும் குழு ஒப்புதல் தராததும் காரணம் எனக் கூறிய அமைச்சர், தமிழ்நாட்டில் விமான நிலையங்களின் அறிவிப்புகளில் இனி முதன்மை மொழியாக தமிழ் இருக்கும் என்றார்.சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தை தரம் உயர்த்த ரூ.146 கோடிக்கு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளோம். இதில் 13 அம்சங்களில் 2 அம்சங்களை தமிழ்நாடு அரசே செய்ய உள்ளது. எழும்பூர் அருங் காட்சியகம் புதுபொலிவுடன் 10 ஆம் தேதி தொடங்க உள்ளது என்றும் அவர் கூறினார்.தஞ்சாவூர் அரண்மனை, தரங்கம்பாடியில் பழைய அரண்மனையைப் புதுப்பிக்க நிதியுதவி செய்வதாக மத்திய அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.கீழடியில், 4 இடங்களில் நடப்பது போல் ஆதிச்சநல்லூரிலும் 4 இடங்களில் ஆய்வு செய்ய உள்ளோம். இதற்கான அனுமதி கிடைக்கும் என்றும் தமிழை அலுவல் மொழியாக மத்திய அரசே அறிவிக்க வேண்டும் என்பதற்கான முயற்சி எடுத்து வருகிறோம். மத்திய அரசு அறிவித்து விட்டால் அனைத்து இடங்களிலும் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற அண்ணாவின் கொள்கை நிறைவேற்றி வைக்கப்படும் என்றும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.