tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு  ஏடிஎம் கார்டு வழங்க வேண்டும்  மணலி பகுதி மாநாடு வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 18- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மணலி பகுதி 2ஆவது பகுதி மாநாடு ஆர்.எஸ்.வி.குருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. எம்.பெருமாள் கொடி ஏற்றினார். வி.சுரேஷ் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநில பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணி மாநாட்டை துவக்கி வைத்தார். செயலாளர் எம்.பிரேமா வேலை அறிக்கையையும், பொருளாளர் பி.கீதா வரவு, செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.  மாவட்டத் தலைவர் ஆர்.ஜெயச்சந்திரன். ஜி.சிட்டிபாபு (சிஐடியு), எம்.தர்மலிங்கம் (தர்ஷா பவுண்டேஷன்), மாவட்ட பொருளாளர் ஆர்.நடராஜன், நீலவேணி (மாதர் சங்கம்) ஆகியோர் வாழ்த்தி பேசினார். மாவட்டச் செயலாளர் எஸ்.ராணி மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக வாசுதேவன் வரவேற்றார். எம்.பிரமிளா நன்றி கூறினார். தீர்மானங்கள் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் தரை தளத்தில் வீடு வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டையை (அந்த்யோதயா அன்ன யோஜனா)கார்டுகளாக மாற்றித் தர வேண்டும், வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவித்தொகை கேட்டு பதிவு செய்து ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருக்கும் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும், பகுதி வாரியாக மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர சிறப்பு கூட்டங்கள் நடத்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு மணலி பகுதி தலைவராக கீதா, செயலாளராக பிரேமா, பொருளாளராக வி.குருமூர்த்தி உள்ளிட்ட 17 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு திருக்குறள் பேச்சு, ஓவியம்  கட்டுரைப் போட்டிகள்

சென்னை, ஜூன் 18- ஸ்ரீராம் குழும நிறுவனங்களின் ஒரு அங்கமாகிய ஸ்ரீராம் இலக்கியக் கழகம், வரும் ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 24 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியரிடையே திருக்குறள் பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடத்த இருக்கிறது. நடைபெறும் இடங்கள்: இப்போட்டிகள், 12 மையங்களில் நடத்தப்படும். சென்னையில், ஜூலை 12 அன்று அண்ணா நகரில் உள்ள சி.எஸ்.ஐ. ஜெஸ்ஸி மோசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், ஜூலை 19 அன்று கிழக்கு தாம்பரத்திலுள்ள கிறிஸ்து ராஜா பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடை பெறுகிறது. சென்னை தவிர, ஜூலை 13 வேலூரிலும், ஜூலை 20 புதுச்சேரியிலும், ஜூலை 26 சேலத்திலும், ஜூலை 27 திருச்சியிலும், ஆகஸ்ட் 2 மதுரையிலும், ஆகஸ்ட் 3 நெல்லையிலும், ஆகஸ்ட் 9 தஞ்சாவூரிலும், ஆகஸ்ட் 10 திருவாரூரிலும், ஆகஸ்ட் 23 கோவையிலும், ஆகஸ்ட் 24 ஈரோட்டிலும் நடைபெறவுள்ளது. இடைநிலை (6 - 8 ஆம் வகுப்புகள்), மேல்நிலை (9 - 12 ஆம் வகுப்புகள்), கல்லூரி என மூன்று பிரிவு களாக இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் பங்கு பெற விரும்புவோர் இதற்கான விண்ணப்பப் படிவத்தினை அருகிலுள்ள ஸ்ரீராம் சிட்ஸ் கிளைகளில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது www.shriramchits.com என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அங்கன்வாடி ஊழியர்கள்  மாலை நேர ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை, ஜூன் 18 - சிவகங்கை மற்றும் தென்காசி மாவட்ட செயலாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்ததை ரத்து செய்ய வேண்டும், மாவட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்களின் பிரச்சனைகளுக்கு உடனடியாக பேசி தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்து மாவட்டத் துணைத் தலைவர் இ. பாரதி தலைமையில் செவ்வாயன்று (ஜூன் 17) முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் ஆ. தவராஜ், மாநில குழு உறுப்பினர் அமிர்தவல்லி, மாவட்ட பொருளாளர் மாலதி, இணை செயலாளர் சி ரேவதி, ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் பி. மணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.