tamilnadu

img

அதிகரிக்கும் வெப்ப அலை எச்சரிக்கையுடன் இருப்போம்

சென்னை, ஏப். 26 - தமிழ்நாட்டில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் கவனமாகவும், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறி வுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. அடுத்த 5 நாட்களுக்கு வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும், வெப்ப அலையும் ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே, மக்கள் கவனத்துடனும், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

வெப்பத்தில் இருந்து மக்களை பாதுகாப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். வெப்பநிலை அதிகமாகும் போது குழந்தைகள், பள்ளி மாணவ- மாணவிகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள், உடல்நலக் குறைபாடு உடையவர்களை மிக கவனமாக பாதுகாக்க வேண்டும். 

பணி நேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக அளவில் மோர், அரிசிக் கஞ்சி, இளநீர், எலுமிச்சை சாறு, ஓஆர்எஸ் கரைசல் போன்றவற்றை பருக வேண்டும். நீர்ச்சத்து காய்கறிகள், பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

வெளியில் செல்லும்போது, திறந்த வெளியில் பணியாற்றும்போது, தலையில் பருத்தித் துணி, துண்டு, தொப்பி அணிய வேண்டும். தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மிருதுவான, தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது.

மிகவும் சோர்வாக, மயக்கமாக இருந்தால் மருத்துவ உதவியை நாட வேண்டும். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், நலவாழ்வு மையங்கள், சமூக நல மையங்கள், மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். அதிகாரிகள் முழு அக்கறை செலுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

;