நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஏரி, குளம், கண்மாய்களிலிருந்து களிமண் மற்றும் வண்டல் மண் ஆகியவற்றை கட்டணமின்றி எடுத்து பயன்பெறுவதற்கான அனுமதி ஆணைகளை பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளம், கண்மாய்களில் உள்ள வண்டல் மற்றும் களிமண் ஆகியவற்றை விவசாய பெருமக்கள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்கள் விவசாய பயன்பாட்டிற்கும், மண்பாண்டம் செய்வதற்கும் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம். இதன்மூலம் இவர்கள் பயன்பெறுவதோடு, ஏரி, குளம் மற்றும் கண்மாய்கள் ஆழப்படுத்தப்பட்டு அதிக மழை நீரைச் சேமித்திட இத்திட்டம் உதவும்.
இத்திட்டத்தினை எளிமையாக செயல்படுத்திட, தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு இணையதளம் tnesevai.tn.gov.in மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர்களுக்கு பதிலாக வட்டாட்சியர்களால் அனுமதி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பயனாளிகள் தங்களது கிராமத்தில் அமைந்துள்ள நீர்நிலைகள் உட்பட அவர்கள் சேர்ந்த வட்டத்தில் அமைந்துள்ள நீர்நிலைகளிலும் வண்டல் மற்றும் களிமண் ஆகியவற்றை எடுத்துச் செல்லலாம்.
இத்திட்டத்தினை, முதல்வர் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 விவசாய பெருமக்கள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்களுக்கு அனுமதி ஆணைகளை வழங்கி, தொடங்கி வைத்தார். அதன்படி, இன்று முதல் விவசாய பெருமக்கள் மற்றும் மண்பாண்ட தொழில் செய்வோர் விண்ணப்பித்து பயன்பெறலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.