காஞ்சிபுரம், மே 10-காஞ்சிபுரம் அருகே அரக்கோணம் சாலையில் இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.காஞ்சிபுரம் மாவட்டம், படுநெல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகன் ரவிக்குமார் (21). காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தன் கல்லூரி நண்பர்களான மணியாச்சி கிராமத்தைச் சேர்ந்த சீனு மகன் வெங்கடேசன் (21) மற்றும் பாஸ்கர் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் படுநெல்லி கிராமத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் புதுப்பாக்கம் அருகே வந்து கொண்டிருந்தபோது, காஞ்சிபுரத்தில் இருந்து காளஹஸ்திரி நோக்கிச் சென்ற தனியார் பேருந்து எதிர்பாராதவிதமாக மோட்டர் பைக் மேல் மோதியது. இதில்பேருந்தின் டயரில் சிக்கிய ரவிக்குமார் மற்றும் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக பலியானார்கள். உடன் சென்ற பாஸ்கர் தலையில் பலத்த காயங்களுடன் தூக்கி வீசப் பட்டார். சம்பவ இடத்துக்கு வந்த காஞ்சிபுரம் தாலுக்கா காவலர்கள் பாஸ்கரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுமேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிரிழந்த ரவிக்குமார், வெங்கடேசன் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.