tamilnadu

img

மாடு முட்டியதால் படுகாயமடைந்த பெண் தொடைப் பகுதி அழுகியது

சென்னை, ஜூன் 23- சென்னை திருவொற்றியூரில் மாடு முட்டியதில் பலத்த காயமடைந்த பெண்ணின் கால் பகுதி அழுகிப்போன சோகம் அரங்கேறியுள்ளது.  அறுவை சிகிச்சை செய்யாவிட்டால், முழுவதுமாக காலை அகற்ற வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் சென்னை திரு வொற்றியூர் அம்சா தோட்டம் 2ஆவது தெருவை சேர்ந்தவர். வேன் ஓட்டுநர் வினோத் மனைவியான மதுமதி, கடந்த 16ஆம் தேதி தனது வீட்டின் அருகில் உள்ள உறவினர் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு எடுத்துக்கொண்டு நடந்து சென்றார். அப்போது எங்கிருந்தோ ஓடி வந்த ஒரு எருமை மாடு, மதுமதியை வேகமாக முட்டி தூக்கி, கொம்புகளால் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு தர தரவென இழுத்துச் சென்றது. மாடு முட்டியதில் காலில் பலத்த காயமடைந்த மதுமதியை உறவி னர்கள் மீட்டு, திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு மதுமதியின் காலில் ஏற்பட்ட பலத்த காயத்துக்கு 40 தையலுக்கு மேல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம் ஆன நிலையில், மதுமதியின் கால் தொடை பகுதி அழுகிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காலில் அழுகிய நிலையில் இருந்த சதை பகுதியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். மேலும், அகற்றப்பட்ட சதை பகுதியில், மற்றொரு காலில் இருந்து சதைப் பகுதியை வெட்டி எடுத்துவைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மதுமதியின் கணவர் வினோத் கூறுகையில், தையலைப் பிரித்து பார்த்ததும் கால் பகுதியில் அழுகி இருந்தது தெரியவந்தது. மற்றொரு காலில் இருந்து சதையை எடுத்து இந்த காலில் வைத்து அறுவை சிகிச்சை மீண்டும் செய்ய வேண்டும் என்றார்கள். ஏற்கெனவே ரூ. 1 லட்சம் வரை செலவு செய்துவிட்டேன். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உதவி செய்ததால் அதைவைத்து எப்படியோ சமாளித்துவிட்டேன். இதற்கும் மேல் என்னால் எதுவும் செய்ய முடிய வில்லை. அரசு ஏதாவது உதவி செய்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.