tamilnadu

img

ஒரு நியாய விலைக்கடை ஊழியரின் குமுறல்

கொரோனா தொற்றால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருவது மட்டுமல்ல மக்களும் சொல் லொண்ணாத் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர்.இந் நிலையில் மக்களின் பசிப்பிணியைப் போக்க பொது விநியோக திட்டத்தின் மூலம் உணவு தானியங்களை வினியோகிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்ததன் விளைவாக மத்திய, மாநில அரசுகளும் முடிவெடுத்து அறிவித்தன. குறிப்பாக தமிழகத்தில் அரசு அறிவித்த நிவாரணத் தொகை மற்றும் உணவு தானியங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் நியாய விலைக் கடை ஊழியர்கள் பெரும் பங்காற்றி வருகின்றனர். அதேசமயம் நியாயவிலைக்கடைஊழியர்களை தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு உபகரணங்கள், கையுறை, கிருமிநாசினி, சோப்பு போன்றவற்றை வழங்கவும் கழிப்பறை, குடிநீர் உட்பட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முழுமையான நடவடிக்கை இல்லை.

தொற்றுகாரணமாக பலர் பாதிப்படைந்து வரும் நிலையில் சென்னை டியுசிஎஸ் நியாயவிலைக் கடை ஊழியர்  சுரேஷ்குமார்(42) கடந்த 14ஆம் தேதி அரசு மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டார். பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க ஆணைவழங்கப்பட்டிருந்தும் எவ்வித நிதி ஆதாரமுமில்லாத கூட்டுறவு நிறுவனங்களிடம் ஊதியத்திற்கே பணம் இல்லை . இதெல்லாம் வாங்குவதற்கு எங்கே போவது என திகைத்து வருகின்றனர். ஆனால் நியாய விலைக் கடை குறைபாடு அனைத்திற்கும் ஊழியர்கள்மீது பழிசுமத்தி அரசு தனதுபொறுப்பை தட்டிக்கழிக்கிறது.மக்களுக்கு வழங்கும் உணவு தானியங்கள் எடைக்குறைவு என்பது தொடர்ந்து கூறப்படும் பழிச்சொல். எடை குறைவுக்கு யார் காரணம் என் பது அரசுக்குத் தெளிவாகத் தெரியும். நியாயவிலைக் கடைகளுக்கு நகர்வு செய்து எடைபோட்டு இறக்கும் நிலை இன்றுவரை ஏற்கப்படவில்லை. ஒவ்வொரு மூட்டைக்கும் 5 கிலோ முதல் 10 கிலோ வரை குறைவாக வருகிறது என ஊடகங்களில் செய்திவெளியாகிறது.சமச்சீர் மூட்டைகளாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இதுநாள் வரை ஏற்கப்படவில்லை. நியாய விலை கடைகளில் எடைபோட்டு இறக்குவது, பாக்கெட் முறையினை உறுதி செய்யாமல் எடை குறைவு என்பதற்கு முற்றுப் புள்ளி வைக்க முடியாது என்பதை அனைவரும் அறிவர். 

இரண்டாவதாக குடும்ப அட்டைகளுக்கான முழு ஒதுக்கீடு என்பது இதுநாள் வரை பூர்த்தி செய்யப்படவில்லை. ஏற்கனவே தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி  (NFSA)உணவு தானியம் வழங்கப்படவில்லை என்பது மட்டுமல்ல,  தமிழக அரசு 2016 நவம்பர் 1 ஆம் தேதி அறிவித்த அளவீடுகளின்படி இதுவரை குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கப்படவில்லை .அதிகபட்சமாக ஒரு குடும்ப அட்டைக்கு 20 கிலோ அரிசி மட்டுமே வழங்கப்பட்டு வந்துள்ளது. துவரம் பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை, மண்ணெண்ணெய் ஆகியவை முழுஒதுக்கீடு இல்லை என்பதை அனைவரும் அறிவர்.

     
தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள பிரதம மந்திரியின் ஏழைகள் நலன் காக்கும் உணவு வழங்கல் திட்டம் மூலம் குடும்ப அட்டையில் உள்ள நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி வீதம் கூடுதல் அரிசியினை ஏப்ரல் மாதத்தில் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் உணவுத்துறை ஆணையே ஏப்ரல் 27ஆம் தேதிதான் வழங்கப்பட்டது. இதனால் ஏப்ரல் மாதத்திற்கான மத்திய அரசு அளித்த கூடுதல் அரிசி மக்களுக்கு சென்றடையவில்லை.மே மாதத்திற்கான ஒதுக்கீடும் சீரமைக்காத நிலை
யில் பதிவாளர் அவர்களால் சுற்றறிக்கை 11.5 2020 இல்தான் குடும்பங்களுக்கான அளவீடுகள் குறித்த விளக்கத்துடன்  வெளியிடப்பட்டது

நியாயவிலைக் கடைகளில் உள்ள  பிஒஎஸ் (POS) கருவியில் இடம்பெற்ற அளவீடுகளும், அரசு தெரிவித்த அளவீடுகளும் மாறுபட்டு இருந்ததை அனைவரும் அறிவர். ஒதுக்கீடுகள் சரிசெய்யப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தபின்  எஸ்.எஸ்.ஆர்.எம்.பி.ஆர். என்ற குறியீட்டில் ஒதுக்கீடுகள் பதிவு செய்யப்பட்டது .ஏற்கனவே டோக்கன் முறையில் அரிசி வழங்கப்பட்ட பின் மீண்டும் மத்திய அரசின் திட்டத்தின் படி அரிசி வழங்கப்படும் என்ற (கூடுதலாக நபர் ஒருவருக்கு ஐந்து கிலோ) ஏப்ரல் மாதம் நிலுவையிலுள்ளதில் 50%  மே மாதத்துடன் சேர்த்து வழங்கப்படும் என்றோ அடுத்த 50% ஜூன் மாதத்தில் வழங்கப்படும் என்றோ தெரிவிக்கப் படவில்லை. ஏற்கனவே குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்பட்டு வந்த அளவீடுகளை மாற்றி தேசிய உணவு பாதுகாப்புச் சட்டப்படி நபருக்கு 5 கிலோ அரிசி வழங்கப்படுவது குறித்து உரிய விழிப்புணர்வு விளம்பரங்களும் செய்யப்படவில்லை.   இதன் காரணமாக ஒதுக்கீட்டின் படி அரிசி கிடைக்கவில்லை என மக்கள் தெரிவித்து வருகின்றனர். 
மேலும் நிரந்தரமாக மாதம்தோறும் வழங்கும் அளவுகூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பதும், பிரதம மந்திரியின் ஏழைகள் நலன் காக்கும் உணவு வழங்கல் திட்டத்தின் கீழ் வழங்கவேண்டிய ஒதுக்கீடு சரியான நேரத்தில் வழங்காததும் இதற்கு காரணம் என்பதை அரசு ஏற்றுக்கொள்ள மறுத்து  ஊழியர்கள் மீது வழக்கம்போல் பழி சுமத்தப்படுகிறது. மேலும் போதிய ஊழியர் இன்றி நகர்வு செய்யப்படுவதும், நியாயவிலைக் கடைகளில் போதிய இடம் இல்லை என  உணர்ந்தும் நகர்வை கட்டாயப்படுத்துவது, நியாயவிலைக் கடைகளில் தேங்கி உள்ள காலி சாக்குகளை அப்புறப்படுத்தாமல் இருப்பது கூட்டுறவுத்துறை நன்கு அறியும். ஓய்வின்றி பெரும் சிரமத்திற்கு இடையே பணியாற்றி வரும் நியாயவிலைக் கடை ஊழியர் மீது பழி சுமத்தி அரசு தனது பொறுப்பை தட்டிக் கழிக்கிறது.

கொரோனா ஊரடங்கு  காலத்தில் பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டதால் போக்குவரத்து செலவுக்கான தொகை அளித்திட வேண்டும் மற்ற துறை ஊழியர்கள் வழங்கியது போன்று இவர்களுக்கு ஒரு மாத ஊதியம் ஊக்கத்தொகையாக அளித்திட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தபோது நாள் ஒன்றுக்கு ரூபாய் 200/_ பயணச்செலவுபடியாகவும், ஏப்ரல் மாதத்திற்கான ஊக்கத்தொகை விற்பனையாளருக்கு ரூ2500, கட்டுனருக்கு ரூபாய் 2000/- வழங்கப்படும் என அரசு அறிவித்தது.ஊழியர்களுக்கான பயணச் சலுகை தொடர்ந்து வழங்கப் பட்டு வந்தாலும், ஊக்கத்தொகை ஒரு மாதத்துடன் நின்றுவிட்டது.இது போன்ற ஒரு சிறு சிறு உதவிகள் கூட பலகூட்டுறவு சங்கங்களில் நிதியின்றி வழங்கப்படவில்லை என தகவல்கள் வருகிறது.
மூன்று மாத காலமாக விலையில்லா பொருட் கள் வழங்குவதன் காரணமாக கூட்டுறவு சங்கங்களுக்கு வரவேண்டிய விளிம்பு தொகை மற்றும் மானியத் தொகைகளை வராத காரணத்தினால் பல கூட்டுறவு சங்கங்களில் ஊதியம் பெற வழி
யின்றி உள்ளனர். இதனால் நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க மத்திய கூட்டுறவு வங்கியின் காசுக்கடனை எதிர்நோக்கியுள்ளனர்.இத்தகைய சூழலில்தான் தற்போது மீண்டும் நிவாரணதொகை மற்றும் உணவு தானியங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ள பகுதிகளில் வீட்டிற்கே சென்று வழங்க வேண்டுமென்ற அரசு உத்தரவு வந்துள்ளது.மேலும் அடுத்த மாதம் குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள ஒவ்வொருவருக்கும் இரண்டு முக கவசம் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது.

மக்களின் பசிப்பிணியை உணர்ந்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கடுமையான பணியினை செய்து வரும் நியாய விலைக் கடை ஊழியர்களின் கோரிக்கைகளான உயிரிழந்த ஊழியர் குடும்பத்திற்கு அரசுத்துறை ஊழியர்களுக்கு வழங்குவது போன்று நிவாரணத்தொகை, மருத்துவ காப்பீட்டு தொகை உயர்த்துதல், அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை, தொற்றிலிருந்து பாதுகாக்க கையுறை, கிருமிநாசினி, சோப்பு, முக கவசம் உள்ளிட்டவைகளை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் இதையெல்லாம் அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதே நியாயவிலைக்கடை ஊழியரின் வேண்டுகோள்.  

===ஆ. கிருஷ்ணமூர்த்தி ===
 தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம், (சிஐடியு), சென்னை 

;