சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவர், சிகிச்சை அளித்த பயிற்சி மருத்துவரின் கழுத்தில் கத்தரிக்கோலால் குத்தியதால் பரபரப்பு.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், இன்று அதிகாலை ஒரு மணியளவில் கல்லீரல் பிரச்சனை காரணமாக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட பாலாஜி என்பவர் தனது கையில் போடப்பட்டிருந்த குல்கோஸ் ஊசியினை அகற்றக் கோரி அப்போது பணியில் இருந்த பயிற்சி மருத்துவர் சூர்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த பாலாஜி அருகில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து பயிற்சி மருத்துவர் சூர்யா கழுத்தில் குத்தியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த சூர்யாவை, அங்கிருந்தவர்கள் மீட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். இதை அடுத்து, நோயாளி பாலாஜி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்தை அறிந்த 100க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள், அம்மருத்துவமனை வளாகத்தில் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பயிற்சி மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய டீன் தேரணி ராஜன், மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என கூறிய நிலையில், போராட்டம் கைவிடப்பட்டது.