tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

பரங்கிப்பேட்டையில் நவீன பேருந்து நிலையம் அமைக்கக்கோரி கவனஈர்ப்பு தீர்மானம்

சிதம்பரம், டிச.10- சிதம்பரம் பேருந்து நிலையம் கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் தனியாருக்கு சொந்தமான இடத்தில் குத்தகைக்கு இயங்கி வருகிறது.  மிகவும் குறுகலான தெருவில் 2 பேருந்துகள் மட்டுமே நிற்க கூடிய வகையில் உள்ளது.

பரங்கிப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வதில் சிரமமாக உள்ளது.  எனவே இந்த பகுதியில் நவீன வசதிகளுடன் அதிக பேருந்துகள் வந்து செல்லும் வகையில் பெரிய புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று சிதம்பரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே.ஏ.பாண்டியன்  சட்டப்பேரவையில் திங்களன்று  பேரவைத் தலைவரிடம் கவன ஈர்ப்பு தீர்மானத்தை வழங்கினார்.  மேலும்  சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிதம்பரம் தொகுதி  எம்எல்ஏவாக இருந்த போது புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று  முதல்வருக்கு கடிதம் எழுதினார்.  இதேகோரிக்கை சிபிஎம் பரங்கிப்பேட்டை ஒன்றிய மாநாட்டில் தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு சமூக நல அமைப்புகள், அரசியல் கட்சிகள் பரங்கிப்பேட்டை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

தனியார்  நிறுவனத்தில் தீ விபத்து

கடலூர், டிச.10- பண்ருட்டி அருகே நள்ளிரவில் தனியாருக்கு சொந்தமான கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது .

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள சூரக்குப்பம் கிராமத்தை சேர்ந்த தரணி (54). இவருக்கு சொந்தமான எஸ்.கே.எஸ் மணிலா கேக் கம்பெனி  அதே பகுதியில் இயங்கி வருகிறது. வழக்கம்போல் பணி முடிந்து திங்கள்கிழமை இரவு கம்பெனியை மூடிவிட்டு சென்ற நிலையில், நள்ளிரவில் திடீரென்று தீப்பிடித்தது.  

தகவல்அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் கேக் மற்றும் மிஷின்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதம் ஆனது.  தீ விபத்து  குறித்து பண்ருட்டி  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து  மின் கசிவு காரணமா,  இல்லை வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

66 வயது கிராண்ட் மாஸ்டரை வீழ்த்திய 9 வயது சிறுவன்

ஒடிசா மாநிலம்புவனேஸ்வரில் ஐஐடி இன்டர்நேஷனல் ஓபன் செஸ் தொடர் நடைபெற்றது. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த 66 வயதான கிராண்ட் மாஸ்டர் ராசித், 9 வயது சிறுவன் ஆர்த்தி கபிலுடன் பலப்பரீட்சை நடத்தினார்.  

9 வயது சிறுவன் நம்மை என்ன செய்ய போகிறார் என்ற எண்ணத்தில் ராசித் அசால்ட்டாக விளையாடினார்.

ஆனால் சிறுவன் ஆர்த்தி கபில் துல்லியமான நகர்த்தல் மூலம் ராசித்திற்கு கடும் நெருக்கடி கொடுத்து, 63 நகர்த்தலில் வெற்றியை தன் பக்கம் வசமாக்கினார். இதன் மூலம் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்து பெற்ற வீரரை வீழ்த்திய இளம் இந்திய வீரர் என்ற சாதனையை ஆர்த்தி கபில் படைத்திருக்கிறார். இந்த வெற்றியின் மூலம் கபில் 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.