tamilnadu

img

பலகோடி முறைசாராத் தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களைப் புறக்கணித்த பட்ஜெட்

மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று திமுக உறுப்பினரும், தொமுச தலை வருமான எம். சண்முகம் பேசியதில் இருந்து...

நிதி ஆயோக் அறிக்கையில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நகர்ப்புற முன்னேற்றம் என்பது மிகச் சிறப்பாக உள்ளது என்றும், ஊராட்சிகளின் நடவடிக்கைகள் மிகச் சிறப்பாக இருக்கின்றன என்றும் சான்றளித்துள்ளார்கள். அதனை நான் சுட்டிக்காட்டி, இப்படிப்பட்ட ஒரு மாபெரும் மாற்றத்தைச் செய்திருக்கக்கூடிய  எங்களுடைய  முதல்வர் மு.க.ஸ்டாலின்  உங்களிடம் வேண்டுகின்ற நிதியை தராமல் நீங்கள் தொடர்ந்து மூன்றாண்டுகளாக பாரபட்சம் காட்டி வருகிறீர்கள்! இன்றையதினம் வளர்ந்துவரும் நகரமயமாக்கலில் போக்குவரத்து என்பது மிகவும் கடுமையாக பொதுமக்களைப் பாதித்து வருகின்றது. அதற்காக மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. சென்னையில் இரண்டாவது மெட்ரோ திட்டத்திற்கு இதுவரையில் ஒன்றிய அரசு நிதி வழங்கவில்லை. ஆனால் மாநில அரசு தனது பங்கை செலவு செய்து அந்தத் திட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை  தாங்களே அறிவீர்கள். எல்லாவிதமான வரி வசூலும் உங்கள் கையில் இருக்கும்போது தங்களாலான முயற்சிகளை பெரும் சிரமத்துடன் மேற்கொண்டு தமிழகத்திற்கு தாங்கள் உரிய நிதியை வழங்க வேண்டாமா?

காலிப்பணியிடங்களை நிரப்பாத நிலையால்...

இந்த நிதிநிலை அறிக்கையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது தேடிக் கண்டுபிடித்தாலும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அரசு ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற சிவில் சர்வீஸ், குரூப் 1 மற்றும் குரூப் 2 போன்ற உயர் அதிகாரிகளுக்கான தேவையைப் பூர்த்தி செய்வதில் முனைப்பாக இருந்துவருகிறது. ஆனால் பல்வேறு நிர்வாகத்தில் குரூப் 4 என்னும் கீழ்நிலை ஊழியர்களுடைய லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக ரயில்வேயில் போதுமான ஊழியர்கள் இல்லாத காரணத்தால் ரயில் இயக்கம் பாதிக்கப்பட்டிருக்கிறது. விபத்துக்கள் ஏற்படுகின்றன. நூற்றுக்கணக்கான மக்கள் மாண்டு போகிறார்கள். ஆனால் அதற்கு விசாரணை செய்வதற்கு மட்டும் மேலதிகாரிகள் குறைவில்லாமல் இருந்து வருகிறார்கள்.

 இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து, மேலதிகாரி களுக்கும், அடித்தட்டு ஊழியர்களுக்கும் இடையேயிருந்திடும் விகிதத்தை சற்றே ஆய்வு செய்து பாருங்கள். அதிகாரிகளுடைய எண்ணிக்கை கூடியிருக்கிறது. ஊழியர்களுடைய எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதாவது, அந்தக் காலத்தில் ஒரு மாவட்டம் என்பது ஒரு பதினைந்து தாலுக்காக்களைக் கொண்டிருந்தது. அதற்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி மாவட்ட ஆட்சியராக இருந்தார். இன்று இரண்டு தாலுக்கா ஒரு மாவட்டமாக இருக்கிறது. அதற்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி மாவட்ட ஆட்சியராக இருக்கிறார். ஆனால், அவருக்குக் கீழே பணியாற்றக்கூடிய அடித்தட்டு ஊழியர்களின் பணியிடங்கள் நிரப்பப்படாமல் அந்தப் பணிகள் ஒப்பந்த முறையில் நடைபெறுவது மிகவும் விசித்திரமாக உள்ளது. தொழிலாளர் துறையிலேயே ஒப்பந்த  முறையில் பணிகள் நடைபெறுகின்றன என்பது வருந்தக்கூடிய செயலாகும்.

பழைய ஓய்வூதியத்திட்டம்...

தொழிலாளர்கள் விரும்புகின்ற பழைய ஓய்வூதியத் திட்டத்தை நேரடியாக நிறைவேற்றுவோம் என்று சொல்வதற்குப் பதிலாக மாற்று வழியில் கருத்துக்களைக் கூறுவது சரியாக இருக்காது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமலுக்குக் கொண்டுவருவது அரசினுடைய கடமை என்பதை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இ.பி.எப். பென்ஷன் திட்டத்தில் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களுடைய ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்று கோரி வருகின்றனர். ஆனால் அந்தத் தொழிலாளர்கள் சேர்த்து வைத்திருக்கிற பணத்திற்கான உரிய வரவு - செலவு கணக்குகளை இந்த இ.பி.எப். அலுவலகம் தெரிவிப்பதில்லை. 1972ஆம் ஆண்டு குடும்ப ஓய்வூதிய திட்டத்திற்கான பங்குத்தொகையை 1995ஆம் ஆண்டு ஓய்வூதியத் திட்டத்தில் இணைத்திருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் அது எவ்வளவு என்று இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

பிஎப் பிடித்தத்தை பெற முடியாமல் திண்டாட்டம்

1995இலிருந்து இதுவரை இந்த ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் பயனடைந்தவர்கள் எத்தனை பேர்  மரணம் அடைந்துள்ளார்கள்? அவர்களுடைய மூலதனம் (Corpus Fund) என்னவாயிற்று? மேலும் இந்த இ.பி.எப். திட்டம் தொடங்கிய நாள் முதற்கொண்டு இன்றுவரை தொழிலாளர்களுக்கு ஒரு விவரமும் தெரிவிக்கப்படுவதில்லை. இதனால் ஒரு தொழிலாளி ஒரு நிறுவனத்தில் வேலை செய்துவிட்டு, பின்னர் வேறொரு நிறுவனத்தில் சேரும்போது அவர் பழைய நிறுவனத்தில் பணியாற்றியபோது அவரிடமிருந்து பிடித்தம் செய்த தொகையைப் பெறுவதற்கு வழி தெரியாமல் திண்டாடும் நிலை இருக்கிறது.  தொழிலாளர்கள் வியர்வை சிந்தி அவர்களுடைய சேமிப்பைப் பாதுகாப்பதற்காக இ.பி.எப்.நிறுவனத்தில் செலுத்துகிறார்கள். அந்த நிறுவனம் அந்தத் தொழிலாளர்களுக்கு நியாயத்தை வழங்காமல் அவர்களே ஒரு முதலாளியைப் போல தொழிலாளர்களை இழுத்தடிப்பது கண்டிக்கத்தக்கதாகும். எனவே, இந்த நிதியினுடைய ஆதாரத்தையெல்லாம் கணக்கில் கொண்டு அவர்களுடைய பென்ஷன் உயர்வை நிதித்துறை ஆய்வு செய்து அவர்களுக்கு நியாயம் வழங்க வேண்டும்.

பல கோடி தொழிலாளர்கள் முறைசாராத் தொழிலாளர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்கு இந்த நிதிநிலை அறிக்கையில் எதுவும் கூறப்படவில்லை என்பது வருந்தத்தக்கது. மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கையானது தொழிலாளர்கள், விவசாயிகள், சிறுதொழில் முனைவோர்கள், வியாபாரிகள் என அனைவருக்கும் எந்தப் பலனையும் அளிக்காமல், தங்களுடன் கூட்டணி வைத்தவர்களுக்கு விசுவாசத்தைக் காட்டக்கூடிய ஓர் அறிக்கையாக உள்ளது. இதனை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாங்கள் எதிர்ப்பதோடு எங்கள் தலைவர் கூறியதைப்போல மாநிலங்களுக்கு உள்ள உரிமையை நேர்மையாக அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். (ந.நி.)

ஏர் இந்தியாவைப் போல பிஎஸ்என்எல்-ஐயும் ஒழிக்க முயற்சி
 

பொதுத்துறை நிறுவனங்கள் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்து வருகின்றன. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் என்பது இந்தியாவிலேயே ஒரு மாபெரும் பொதுத்துறை நிறுவனமாகும். மனிதனின் உடலில் இருக்கக்கூடிய நரம்புகளைப் போல நாட்டில் உள்ள அனைத்து இடங்களுக்கும் பிஎஸ்என்எல் இணைப்புகள் சென்று வருகின்றன. அந்தமான் கடலுக்கடியில் கம்பிகள் இழுப்பதாக இருந்தாலும், இமயமலை உச்சியில் கம்பிகள் கொண்டுசெல்வதாக இருந்தாலும், மழை, வெள்ளம், பூகம்பம் வந்தாலும் தொலைத் தொடர்புத் முறையை மீண்டும் இயக்க வேண்டும்  என்றால் பிஎஸ்என்எல் உதவி தேவைப்படுகின்றது. ஆனால், தனியார் நிறுவனங்களுக்குக் கொடுக்கின்ற சலுகைகள்,  அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வழங்கப்படவில்லை. நீங்கள் ஊட்டி வளர்க்கின்ற மிகப்பெரிய தனியார் நிறுவனங்கள் இன்று கட்டணத்தை உயர்த்திவிட்டன. அதனால் அனைவரும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்குத் திரும்பத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் இந்திய அரசோ சேட்டிலைட் நெட்வொர்க்கை டாடா நிறுவனத்திற்குக் கொடுத்து அதன்மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கட்டமைப்பைப் பயன்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுத்துவருவதாக அறிகிறோம். இது எப்படி இருக்கிறது என்றால், ஏர் இந்தியாவுக்கு போட்டியாக பல்வேறு தனியார் விமான நிறுவனங்களை ஊக்குவித்து, ஏர் இந்தியாவை சாகடித்தது போன்று இப்போது, அனைத்தையும் டாடா கையில் ஒப்படைத்து, அதன்மூலம் பிஎஸ்என்எல்-ஐயும் கைவிடுவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது வருந்தத்தக்கதாகும். பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக ஊதிய உயர்வு அளிக்காமல் இருப்பதும் கண்டனத்திற்குரியதாகும்.