கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் நாய்கள் தொல்லை
சென்னை, ஏப். 26- சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் மூன்று பெண் நோயாளிகளை நாய்கள் கடித்ததால், மருத்துவமனை வளாகத்தை நாய் இல்லாத இடமாக மாற்ற மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சுமார் 800 உள்நோயாளிகள் மற்றும் 500 வெளி நோயாளிகள் தினசரி சிகிச்சைக்காக வருகின்றனர். இங்கு 25 மருத்துவர்கள், முதுகலை மாணவர்கள், 135 செவிலியர்கள் மற்றும் 200 உதவியாளர்கள் உள்ளனர். வளாகத்தில் சுமார் 100 நாய்கள் சுற்றித் திரிவதால் நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். சமீபத்தில் ஒரு நோயாளியை நாய் கடித்தது. அந்த நோயாளியால் சொல்ல முடியவில்லை. ரத்தம் வெளியேறிய பிறகு, அவரது காலில் காயம் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். ஊழியர்கள் உதவியுடன் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தடுப்பூசி போட்டோம் என்று ஒரு மருத்துவர் கூறியுள்ளார். மருத்துவமனையில் நாய் கடிக்கு எதிரான தடுப்பூசி இல்லை. ஒவ்வொரு வாரமும் குறைந்தது ஒரு நாய் கடி சம்பவமாவது நடக்கிறது என்று மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் நாய்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் நோயாளிகள் அச்சத்துடன் உள்ளனர். மேலும், மருத்துவமனை ஊழியர்களும் நாய்களால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, உடனடியாக நடவடிக்கை எடுத்து வளாகத்தை நாய் இல்லாத இடமாக மாற்ற வேண்டும் என மருத்துவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
3 ரவுடிகள் சென்னைக்கு நுழைய தடை
சென்னை, ஏப்.26- சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட மூன்று முக்கிய ரவுடிகள், நீதிமன்ற அல்லது காவல்துறை தொடர்புடைய விஷயங்களைத் தவிர வேறு எதற்காகவும் ஓர் ஆண்டுக்குச் சென்னைக்குள் வரக்கூடாது எனக் காவல் ஆணையர் அருண் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் அச்சுறுத்தல் தருவதாகவும், தங்களுக்கு எதிரான வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சாட்சிகளை மிரட்டுவதாகவும், பொதுமக்களின் அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதாக சரித்திர பதிவேடு ரவுடிகளான லெனின், நெடுங்குன்றம் சூர்யா மற்றும் ராஜா என்கிற ராக்கெட் ராஜா ஆகிய மூவர் பற்றியும் சென்னை காவல் ஆணையரிடம் தெரிவிக்கப்பட்டது. இதில் லெனின் என்பவர் மீது 6 கொலை வழக்குகள் மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்பட 28 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடி நெடுங்குன்றம் சூர்யா என்பவர் மீது 5 கொலை வழக்குகள், 12 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 64 குற்ற வழக்குகள் உள்ளன. ரவுடி ராஜா (எ) ராக்கெட் ராஜா என்பவர் மீது 5 கொலை வழக்குகள், 6 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 20 குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் மேல் குறிப்பிட்ட மூன்று சரித்திர பதிவேடு ரவுடிகளையும் சட்டம் பிரிவு 51 A-ன் படி வெளியேற்றுதல் ஆணை சனிக்கிழமையன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த 3 ரவுடிகளும் சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குள் நீதிமன்ற வழக்கு தொடர்பாகவோ அல்லது காவல்துறை விசாரணை தொடர்பாகவோ இல்லாமல் வேறு எந்த காரணத்திற்காகவும் வருவதற்கு இன்றிலிருந்து அடுத்த ஓர் ஆண்டுக் காலத்திற்கு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவை மீறும் பட்சத்தில் அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் ஆணையர் அருண் எச்சரித்துள்ளார்.
பூந்தமல்லியில் 9 வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதம்
பூந்தமல்லி, ஏப். 26- பூந்தமல்லியில் வெள்ளிக்கிழமை 9 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சேதமானது. பூந்தமல்லி அருகே சென்னீர்க்குப்பம் ஊராட்சி வடக்கு காலனி பகுதியில் குடிசை வீடுகள் உள்ளன. இதில் வசித்து வரும் 9 குடும்பத்தினரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை ஒரு குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்து அருகில் இருந்த மற்ற குடிசைகளுக்கும் தீ பரவியது. இதில் அடுத்தடுத்து 9 குடிசைகளுக்கும் தீ பரவிய நிலையில், வீட்டில் வசித்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். இந்த விபத்தில் 9 வீடுகளிலும் இருந்த கட்டில், பீரோ, மெத்தை, மாணவர்களின் புத்தகங்கள், சான்றிதழ் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள், 1 இரு சக்கர வாகனங்கள், 2 மிதிவண்டிகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து பூந்தமல்லி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். தகவல் அறிந்த பூந்தமல்லி சட்டபேரவை உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களுக்கு அரிசி, போர்வை, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள், தலா ரூ.5,000 வழங்கினார். தொடர்ந்து வீடு இழந்தவர்களை அங்குள்ள சமுதாயக் கூடத்தில் தங்க வைத்து உணவு அளித்தனர்.