tamilnadu

ஒரே நாளில் 8 இடத்தில் வழிப்பறி: 2 பேர் கைது

ராயபுரம், மே 7- பழைய வண்ணாரப் பேட்டையை சேர்ந்தவர் சுஜாதா. பாரிமுனையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவர் வேலை முடிந்து வீட்டுக்கு செல்ல பாரிமுனை பகுதியில் நடந்து வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சுஜாதாவிடம் இருந்த செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.இதுகுறித்து சுஜாதா ஏழு கிணறு காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதேபோல் அதே நாளில் பாரிமுனை பகுதியில் பல்வேறு இடங்களில் 3 பெண்கள் உள்பட மேலும் 7 பேரிடம் செல்போன் -பண பை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.இதுபற்றி புகார் தெரிவித்தவர்கள் கொடுத்த அடையாளத்தின்படி இந்த வழிப் பறியில் ஈடுபட்டது ஒரே வாலிபர்கள் என்பது தெரியவந்தது.இதையடுத்து காவல்துறையினர் வழிப்பறி சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி இருந்தது.இதனை வைத்து வழிப் பறியில் ஈடுபட்ட புளியந்தோப்பை சேர்ந்த மணி என்கிற ஓசை மணி, திருவொற்றியூர் அரவிந்தன் ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், பாரிமுனை பகுதியில் ஒரே நாளில் 8 இடங்களில் வழிப்பறி செய்ததை ஒப்புக் கொண்டனர்.கைதான 2 பேரிடம் இருந்து 5 செல்போன் கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் மீது ஏற்கனவே கொலை, வழிப்பறி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.அவர்களுக்கு வேறு எந்தெந்த குற்ற வழக்குகளில் தொடர்பு உள்ளது என்று காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;