மதுரை/இராமநாதபுரம்:
பசும்பொன்முத்துராலிங்கத் தேவரின் 113-ஆவது பிறந்ததினம், மற்றும் 58-ஆவது நினைவுதினம் வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி பசும்பொன் நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் மற்றும் அமைச்சர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் கூறுகையில், தென்மாவட்டங்களில் பல்வேறு தொழிற்சாலைகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவிரி - குண்டாறுதிட்டத்தை அதிமுக அரசு நிச்சயமாக நிறைவேற்றும்.அதேபோல், மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நிறையதிட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் பல இடங்களிலும் மீன்பிடி துறைமுகங்கள் அமைத்துள்ளோம். தூண்டில் வளைவுகள், கடல் அரிப்பைத் தடுக்க தடுப்புச்சுவர்கள் அமைத்தல் என பலவகையிலும் அரசு உதவியாக உள்ளது. மீனவர்கள் நலன் காக்க அதிமுக அரசைப்போல் வேறு எவரும் நிதி ஒதுக்கீடு செய்திருக்கமாட்டார்கள் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “அரசுப் பள்ளி மாணவர்களின் நலனைக் கருதியே அதிமுக அரசு, மருத்துவப் படிப்பில் அவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே ஆளுநர் ஒப்புதலுக்கு சட்டமுன்வடிவு அனுப்பப்பட்ட நிலையில் ஆளுநரின் ஒப்புதலுக்கு தாமதமானது.அரசுப் பள்ளியில் ஏழை, எளிய மாணவர்கள் தான் பயில்கின்றனர். அவர்களின் மருத்துவக் கனவு நனவாக வேண்டும். நானும் அரசுப் பள்ளியில் படித்த மாணவன் என்ற வகையில் அரசுப் பள்ளி மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த அரசாணைவெளியிடப்பட்டுள்ளது. சமூக நீதியைப் பாதுகாக்கவே இதைச் செய்துள்ளோம். எதிர்க்கட்சித் தலைவர்கூட கோரிக்கை வைக்கவில்லை. மாணவர்நலன் கருதி அரசாணை வெளியிட்டுள்ளோம்.ஆனால், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர்.அவை எடுபடாது. இந்த ஆண்டே 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை நடைமுறைக்கு கொண்டு வருவோம்” என்று கூறினார்.முன்னதாக அவர் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு அருகேவைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல் வம் உள்ளிட்ட அமைச்சர்கள் மலர்தூவிமரியாதை செலுத்தினர். தொடர்ந்து மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது பாண்டியர் சிலைக்கும் தமிழக முதல்வர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.