tamilnadu

img

பொருளாதாரத்தில் நலிவுற்ற இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு 69% இடஒதுக்கீட்டிற்கு எந்தவகையிலும் பாதிப்பு நேரக்கூடாது: சிபிஎம்

சென்னை, ஜூலை 8- தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு எந்த வகையிலும் பாதிப்பில்லாமல் கூடுதல் மருத்துவ இடங்களைப் பெற்று, பொருளாதாரத்தில் நலிவுற்ற - இட ஒதுக்கீடு பெறாத பொதுப் பிரிவினருக்கு, அந்த மக்கள் தொகையை கணக்கிட்டு அதில் சரிபாதி சதவிகித அளவு என்ற அடிப்படையில் இடஒதுக்கீட்டினை செயல்படுத்தலாம் என, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. 10 விழுக்காடு இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் திங்களன்று (ஜூலை 8) மாலை  5.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், புரட்சி பாரதம், தமிழக முன்னேற்ற கழகம், திராவிடர் கழகம், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், நாம் தமிழர்  கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட 21 கட்சிகளின் தலைவர்கள்  கலந்து கொண்டனர்.

கூடுதல் இடங்கள் கிடைக்கும்...
அனைத்துக்கட்சி கூட்டத்தை துவக்கி வைத்து பேசிய துணை  முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், “கல்வி வேலைவாய்ப்பில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை மாநில அரசு பாதுகாத்து வருகிறது” என்றார். பொருளாதாரத்தில் நலிவுற்ற, இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை மத்திய அரசு சட்டமாக இயற்றி உள்ளது. மருத்துவ கல்லூரிகளில் இட  ஒதுக்கீடு பெறாத பொதுப் பிரிவினருக்கான ஒதுக்கீடு செய்யப் பட்ட பின், தற்போது நடைமுறையில் உள்ள ஒதுக்கீட்டின் அடிப்படையில் 586 இடங்கள் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு கூடுதலாக கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

சமூக நீதியின் ஊற்றுக்கண்
அதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், “சமூக நீதியின் ஊற்று கண்ணாக - இட ஒதுக்கீட்டுக் கொள்கையைச் செயல்படுத்து வதில், பிற மாநிலங்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக, முன்னோடியாக விளங்குகிறது தமிழகம்”என்றார். “சமூகத்திலும், கல்வியிலும் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு” என்று தெளிவாக இருக்கிறது. “பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு” என்று எந்த சொற்றொடரும் அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவிலும் இடம்பெற வில்லை என்றும் தமிழகத்தில் மட்டுமல்ல - இந்திய அளவில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் “சமூக நீதி” மட்டுமே அடிப்படை அம்சம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளவில்லை. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், திக தலைவர் கி.  வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி., மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்தியா, பாமக தலைவர் ஜி.கே.மணி, காங்கிரஸ் மூத்த தலைவர் கோபண்ணா, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன், கமலஹாசன், சீமான், ஜான் பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் தமுமூன் அன்சாரி, கருணாஸ், தனியரசு, அபுபக்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பொதுப்பிரிவு மக்கள் தொகையைக் கணக்கிட்டு சரிபாதி  சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்குக!

பொருளாதாரத்தில் நலிவுற்ற இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கு  இடஒதுக்கீடு வழங்குவது குறித்த அனைத்துக் கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பதிவு செய்த கருத்துக்கள் வருமாறு:

1. சமூகத்தில் நிலவுகிற பொருளாதார, சாதிய ஏற்றத்தாழ்வு களை போக்கி சமத்துவ வாழ்வை உருவாக்க வேண்டுமென்ற லட்சியத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு முக்கிய அம்சமாக சமூக நீதி கோட்பாடு கருதப்பட வேண்டும். ஆனால், இச்சமூக நீதி கோட்பாடு பொதுவாக இடஒதுக்கீடு என்ற வகையில் மட்டும் சுருக்கப்பட்டு விடுகிறது. மண்டல் கமிஷன் குறிப்பிட்டுள்ளதைப் போல இடஒதுக்கீடு என்பதோடு நிலமற்றவர்களுக்கு நிலவி நியோகம், பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவற்றையும் நிறை வேற்றுவதன் மூலமே முழுமையான சமூக நீதியை நிலைநாட்ட  இயலும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.   

2. அமலாக்கப்பட்டு வரும் உலகமய, தாராளமயக் கொள்கை களின் காரணமாக அரசு வேலை வாய்ப்புகள் சுருங்குவதும், காலியிடங்கள் நிரப்பப்படாமல் நீடிப்பதும், தனியார்மயம் அதிகரிப்பதினாலும் இடஒதுக்கீடு கோட்பாடு என்பது பெரும் கேள்விக்குறியாக மாறி வருகிறது. எனவே, காலியிடங்களை நிரப்புவது, அரசு வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது, தனியார்  நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை அமலாக்குவது, பொதுத் துறையை பாதுகாப்பது உள்ளிட்டவை சமூக நீதிக்கான போராட்டத் தின் பிரிக்க முடியாத அங்கம் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்பு கிறோம். அதேபோல மதம் மாறிய தலித் கிறித்துவர்களுக்கு தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதையும் வற்புறுத்த விரும்புகிறோம்.

3. மருத்துவ கல்வி இடங்களில் 15 சதவிகித இடங்கள் அகில இந்திய கோட்டாவிற்கு ஒதுக்கப்படுகிறது. ஆனால், இதில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 27 சதவிகித இடஒதுக்கீட்டை மத்திய அரசு அமலாக்க மறுப்பது சட்ட விரோதமானதாகும். எனவே, மேற்கண்ட அகில இந்திய கோட்டாவில் இதர பிற்படுத்தப்பட்டோ ருக்கான இடஒதுக்கீட்டினை மத்திய அரசு கட்டாயம் அமலாக்க வேண்டும் என்பதை தமிழக அரசு வற்புறுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

4. பொருளாதாரத்தில் நலிந்த இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரி வினருக்கு அதிகபட்சம் 10 சதமானம் வரை இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தினை மத்திய அரசு (124-வது சட்டத்திருத்தம்) நிறைவேற்றியது. இச்சட்டத்திருத்தத்தினை நாடாளுமன்றத்தில் ஆதரித்த அதே நேரத்தில், இதனை நிறைவேற்றுவதற்கு முன் அனைத்துக் கட்சிகளோடு கலந்து பேசி கருத்தொற்றுமையோடு நிறைவேற்றுவதற்கு மாறாக அவசர கதியில் அரசியல் ஆதாய நோக்கோடு மத்திய பாஜக அரசு நிறைவேற்றியதை நாடாளுமன்றத்தில் இம்மசோதா விவாதத்திற்கு வந்த போதே எங்கள் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டியுள்ளோம். 

5.    இச்சட்டத்திருத்தத்தையொட்டி தீர்மானிக்கப்பட்டுள்ள ரூ. 8 லட்சம் உள்ளிட்ட பொருளாதார வரம்பு  என்பது நலிந்தோருக் கான வரம்பாக இருக்க முடியாது. இப்பொருளாதார வரம்பை தமிழகத்தில் குறைத்திட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

6. பொருளாதாரத்தில் நலிந்த இதர பிரிவினருக்கு இடஒதுக்கீட்டி னை அமலாக்கும் போது ஏற்கனவே தமிழகத்தில் அமலில் உள்ள  69 சதவிகித இட ஒதுக்கீட்டு கோட்பாட்டிற்கு எந்த வகையிலும் குந்தகம்  ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறோம். 

7. அரசமைப்பு சட்டப்பிரிவுகள் 15 மற்றும் 16க்கு மேற்கொள் ளப்பட்ட சட்டத் திருத்தத்தின் படி பொருளாதாரத்தில் நலிவுற்ற இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கு அதிகபட்சம் 10 சத விகிதம் வரை (Subject to a maximum of 10 percent) இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் இப்பிரிவினருக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டு மென கட்டாயப்படுத்தவில்லை. எனவே, தமிழகத்தில் இப்பிரிவின ருக்கு 10 சதவிகித அளவிற்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டிய சட்ட ரீதியான நிர்ப்பந்தம் ஏதுமில்லை என்பதை தமிழக அரசின் கவனத்திற்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். 

8. தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் அதிகாரப்பூர்வ மற்ற தகவலின் படி  ஏறக்குறைய 95 சதமான மக்கள் இட ஒதுக்கீட்டு வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். சுமார் 5 சதவிகித மக்கள் மட்டுமே இடஒதுக்கீடு வரம்பிற்குள் கொண்டு  வரப்படவில்லை என விபரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு 10 சதமான இடஒதுக்கீடு என்பது அதீத ஒதுக்கீடாக அமைந்து  விடும். எனவே, இதுவரை இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவின ரின் மக்கள் தொகையினை கணக்கீடு செய்ய வேண்டும். அம்மக்கள் தொகை எத்தனை சதமானம் என கணக்கிட்டு அதில் சரிபாதி சதமான அளவு இப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கி தமிழகத்தில் அமல்படுத்தப்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

9. பொதுவாக  பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ற அளவு இட ஒதுக்கீடு வழங்கும் நடைமுறை இதுவரை இல்லை என்பதை கணக்கில் கொள்ள வேண்டும். இதே அடிப்படையில் பொருளா தாரத்தில் நலிவுற்ற, இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கும் இடஒதுக்கீட்டு விகிதத்தை கணக்கிட்டு அமலாக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். 

10.    தமிழ்நாட்டில் அமலில் உள்ள 69 சதமான இடஒதுக்கீட்டிற்கு எவ்வகையிலும் பாதிப்பில்லாமல் கூடுதல் மருத்துவ இடங்களைப் பெற்று மேலே குறிப்பிட்டுள்ள விகிதப்படி பொருளாதாரத்தில் நலிவுற்ற இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீட்டினை செயல்படுத்தலாம் என தெரிவித்துக் கொள்கிறோம்.