மாமல்லபுரம், நவ. 27- மாமல்லபுரம் அருகே புதனன்று (நவ.27) நிகழ்ந்த கோரவிபத்தில் கார் மோதி 5 பெண்கள் உயிரிழந்தனர்.
மாமல்லபுரம் அடுத்த பையனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பண்டித மேடு அருகே ஓ.எம்.ஆர் சாலையில் அதே பகுதியை சேர்ந்த பெண்கள் எசோதா, கவுரி, லோகம்மாள்,விஜயா, ஆத்தாயி ஆகிய 5பேரும் புதனன்று ( நவம்பர் 27 ) அப்பகுதி கால்நடை மேச்சலுக்கான பகுதியில், மாடுகளை மேச்சலுக்கு அனுப்பிவிட்டு, சாலையோரம் அமர்ந்திருந்தனர். அப்போது சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கிச் சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 5பேர் மீதும் மோதியது. இதில் 5பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காரில் வந்த அப்பகுதி கல்லூரி மாணவர்கள் 4பேரில், ஜோஸ்வா, தாஹின் அகமது ஆகிய இருவர் பிடிபட்டனர். 2பேர் தப்பி ஓடிவிட்டனர். உயிரிழந்த 5பேருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இரண்டு மணிநேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவம் நடத்த இடத்திற்கு வந்த செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரனீத், சார் ஆட்சியர் நாராயண சர்மா, மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் பாலமுருகன் உள்ளிட்ட அலுவலர்கள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்டவர் கலைந்து சென்றனர். இறந்தவர்களின் உடல்களை மீட்ட காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.