tamilnadu

img

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக் கடன் தள்ளுபடி....

சென்னை:
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் ஒரு குடும்பத்திற்கு 5 சவரன் வரையிலான நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மூன்று நாள் விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாடு சட்டப் பேரவை திங்களன்று  கூடியது. அப்போது, நகைக் கடன் தள்ளுபடி தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110–ன் கீழ் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை அளித்தார்.
2021 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில், “கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்” என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதனை நிறைவேற்றும் விதமாக இந்த அறிவிப்பை வெளியிடுவதாக கூறினார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் கூறியதாவது:-நகைக் கடன்கள் தள்ளுபடி என்பது ஒரு குடும்பத்திற்கு 5 சவரனுக்கு உள்பட்ட நகைக் கடன்களை சில தகுதிகளின்கீழ், உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும். இந்த நகைக் கடன்கள் தள்ளுபடி அறிவிப்பு குறித்து, தகுதியான நபர்களைக் கண்டறிவதற்காக, கடந்த ஒரு மாத காலம், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெற்ற அனைத்து நகைக் கடன்கள்பற்றிய பெயர், கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கடன் கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண், குடும்ப அட்டைஎண், ஆதார் எண், முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட 51 விதமான தகவல்களைச் சேகரித்து, தொகுக்கப் பட்டு கணினி மூலம் விரிவான பகுப்பாய்வு செய்யப்பட்டன.

அவ்வாறு புள்ளிவிவரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டதில் நகைக் கடன்கள் வழங்கப்பட்டதிலும், பல்வேறு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. நகைக் கடன் தள்ளுபடி செய்கையில் சரியான, தகுதியான ஏழை, எளிய மக்கள் மட்டுமே பயன்பெற வேண்டும் என்று இந்த அரசு கருதுகிறது. எனவே, 5 சவரனுக்கும் குறைவாக நகைக் கடன் பெற்றவர்களில் சில நேர்வுகளில் தள்ளுபடி செய்யவேண்டிய அவசியம் ஏற்படவில்லை எனக் கருதப்படுகிறது.எடுத்துக்காட்டாக, 2021 ஆம் ஆண்டு பயிர்க் கடன் தள்ளுபடி வழங்கப்பட்டதில் பயன் பெற்றவர்கள், ஒரே குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள், ஒரு கூட்டுறவு நிறுவனத்திலோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களிலிருந்தோ, ஒன்றுக்கும் மேற்பட்ட கடன்கள் மூலம் 5 சவரனுக்கு மேல் நகை ஈட்டின்பேரில் கடன்பெற்றவர்கள்; தவறாக ஏஏஒய் (அந்தியோதயா அன்ன யோஜன ) குடும்ப அட்டையைப் பெற்று, அவற்றைப் பயன்படுத்தி நகைக் கடன் பெற்றவர்கள்; மற்றும் இதுபோன்ற மேலும் சில நேர்வுகளில் வழங்கப்பட்ட கடன்களைத் தள்ளுபடி செய்ய இயலாது. இதுகுறித்த விபரமான வழிமுறைகளை கூட்டுறவுத் துறை இன்னும் ஓரிரு நாளில் வெளியிடும்.

இதற்காக கூட்டுறவு நிறுவனங்களுக்கு, தமிழ்நாடு அரசு தேவை யான உதவிகளை செய்யும்.கூட்டுறவு நிறுவனங்கள் இனி நேர்மையாக, திறமையாக, ஏழை எளிய விவசாயிகளும், நடுத்தர வர்க்கத்தினரும் பயன் பெறும் வகையில் செயல்பட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். முழுமையான கணினிமயமாக்கம், நவீன வசதிகளுடன் கூட்டுறவு நிறுவனங்கள் முறையாகக் கண்காணிக்கப் பட்டு, எதிர்காலத்தில் சிறப்பாக நடத்திச் செல்லப்படும்.இந்த நகைக் கடன் தள்ளுபடி குறித்த தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு வெளிவந்தவுடன், முறையற்றவகையில் தள்ளுபடி பெறவேண்டும்என்கிற தவறான நோக்கத்தோடு, நகைக் கடன் களைப் பெற்றிருப்பதும், குறிப்பாக, சில மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டசங்கங்களின்மீது தகுந்த நட வடிக்கையை இந்த அரசு எடுக்கும்.  இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.

;