சென்னை:
சென்னை வண்ணாரப் பேட்டை கப்பல் போலு தெருவில் வசிக்கும் மூன்று குடும்பத்தினர் தங்களது குழந்தைகளுடன் காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள கடற்கரைக்கு சென்றனர். அங்கு இவர்கள் கடலில் குளித்து விளையாடியபோது, திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி, 3 சிறுவர்கள் மற்றும் 2 சிறுமிகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மீனவர்கள் சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாரும், மீனவர்களுடன் சேர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது, கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால், சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட 19 வயது வாலிபர், அலையில் சிக்கி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மீட்புப் பணியின் போது திங்களன்று காலை மூன்று சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.ஞாயிற்றுக்கிழமை ஒருவரது உடல் மீட்கப்பட்டது. மேலும் ஒரு சிறுமியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.