tamilnadu

img

நில அளவை கட்டணங்கள் 40 மடங்கு கடும் உயர்வு ஏழை எளிய நடுத்தர மக்கள் மீது தமிழக அரசு கொடும் தாக்குதல்

சென்னை, ஜூலை 26- ஒட்டுமொத்த தமிழகமும் கொரோனாவோடு போராடிக் கொண்டிருக்கும் வேளையில், மக்கள்  மீதான மற்றொரு கடும் தாக்குதலாக எடப்பாடி  பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, நில அளவை, உட்பிரிவு, புல எல்லை அமைத்தல், மேல்முறையீடு, புலப்பட நகல், வரைபடங்கள் வழங்குதல் உள்ளிட்ட ஒட்டுமொத்த பட்டா வழங்கல் மற்றும் நில அளவை துறை சார்ந்த கட்டணங்கள் அனைத்தையும் எளிய நடுத்தர மக்கள் எவரும் தாங்க முடியாத அளவிற்கு பல மடங்கு அதிகரித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.  கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு  தொழில்கள் முடங்கியுள்ள நிலையில், அரசுக்கு வருவாய் வாய்ப்புகள் சுருங்கியுள்ளன என்பது உண்மையே. ஆனால் மத்திய அரசிடமிருந்து கிடைக்கப்பெற வேண்டிய ஜிஎஸ்டி நிலுவையை அவர்களிடம் போராடிப் பெறுவது உள்பட பல்வேறு வருவாய் வாய்ப்புகளை உருவாக்கு வதற்குப் பதிலாக, பெட்ரோல், டீசல் வரி உயர்வு, இடைவிடாத டாஸ்மாக் வியாபாரம் உள்ளிட்ட மக்கள்விரோதப் பாதையிலேயே தமிழக அரசு பயணித்து வருகிறது. இதன் அடுத்த கட்ட மாக நில அளவை மற்றும் நில வரித் திட்டம் தொடர்பான அனைத்துக் கட்டணங்களையும் கடுமையாக உயர்த்தி தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் வேளாண்மைத்துறை ஜூலை 21 அன்று அரசாணை வெளியிட்டிருக்கிறது.

அதன்படி, பொதுமக்களின் பயன்பாட்டி ற்காக விற்பனை செய்யப்படும் புல அளவீட்டு புத்தகப் பிரதி, புல எல்லைகளை சுட்டிக்காட்டும் பக்க எல்லை, அளவீட்டுக் கருவியைப் பயன் படுத்தி பக்க எல்லை பராமரிப்பு, நில அள வரின் முடிவுகளுக்கு எதிரான மேல்முறை யீடு, நிலத்தின் உட்பிரிவு மற்றும் பாகப்பிரி வினைக்கு முன்னர் நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின்பேரில் புல எல்லைகளை நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்வது, நில அளவை குறியீட்டின் தொகை, மாவட்ட வரைபடம், வட்ட வரைபடம், நகரம் பிளாக் வரைபடங்கள், கிராமம் வரை படம் மற்றும் உட்பிரிவு கட்டணம் ஆகிய அனைத்து சேவைகளுக்கான கட்டணங்களும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு புல எல்லைகளை சுட்டிக்கா ட்டும் பக்க எல்லை வரைபடத்தை அளிப்பதற் கான கட்டணம் 20 ரூபாயாக இருந்தது. தற்போது 200 ரூபாயாக - 10 மடங்கு கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அளவீட்டுக் கருவி யைப் பயன்படுத்தி பக்க எல்லைகளை சுட்டிக் காட்டுவதற்கான கட்டணம் 30 ரூபாயிலிருந்து 300 ரூபாயாகவும், நில அளவரின் முடிவுக்கு எதிரான மேல்முறையீட்டிற்கு கட்டணம் 50 ரூபாயி லிருந்து 400 ரூபாயாகவும் அதிகரிக்கப் பட்டுள்ளது.

பாகப்பிரிவினைக்கு முன்னர் நில உரிமை யாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை நிர்ணயித்து சுட்டிக்காட்டு வதற்கான கட்டணம் 40 மடங்கு கடுமையாக அதி கரிக்கப்பட்டுள்ளது. இந்த சேவைக்கான கட்ட ணம் தற்போது புன்செய் நிலத்திற்கு ரூ.30 என்றும், நன்செய் நிலத்திற்கு ரூ.50 என்றும் உள்ளது. இது முறையே ரூ.1000 என்றும் ரூ.2000 என்றும் புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல மேல்முறையீட்டின்பேரில் மறு  அளவீட்டிற்கான கட்டணம் தற்போது புன்செய்  நிலத்திற்கு ரூ.60 ஆக இருப்பது ரூ.2000மாக அதி கரிக்கப்பட்டுள்ளது. நன்செய் நிலத்திற்கு ரூ.60 ஆக இருப்பது ரூ.4000மாக அதிகரிக்கப் பட்டுள்ளது. அதேபோல நில அளவை  குறியீட்டின்தொகை மற்றும் செலவினங் களுக்கான கூடுதல் கட்டணம் (சர் சார்ஜ்) தற்போது 400 சதவீதமாக உள்ளது. அது 800 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல மாவட்ட, வட்ட, நகரம் பிளாக் மற்றும் கிராம வரைபடங்களுக்கான கட்டணம் முறையே ரூ.51, ரூ.357, ரூ.27, ரூ.85 என்று இருப்பவை தற்போது ரூ.300, ரூ.1000, ரூ.50, ரூ.200 என அதிகரிக்கப்பட்டுள்ளது.  உட்பிரிவு கட்டணம்  கிராமப் புறத்திற்கு ரூ.40 ஆக இருப்பது ரூ.400 ஆகவும், நகராட்சிக்கு ரூ.50ஆக இருப்பது ரூ.500ஆகவும், மாநகராட்சிக்கு ரூ.60ஆக இருப்பது ரூ.600ஆகவும் பத்து மடங்கு கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  கடந்த 18 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிற கட்டணங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் 10 மடங்கு முதல் 40 மடங்கு வரை தமிழக அரசு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே பொருளாதார நெருக்கடி, தொழில் நெருக்கடி, வாழ்வாதார நெருக்கடி களுடன் தற்போது சுகாதார நெருக்கடியையும் வரலாறு காணாத அளவில் சந்தித்து வரும் தமிழக மக்கள் அன்றாட வாழ்வையே நகர்த்து வதற்கு வழியின்றி கடுமையான துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் ஏழை-எளிய, நடுத்தர மக்கள் தங்களது எளிய சேமிப்பு களைக் கொண்டு நிலம் வாங்குதல், பட்டா  மாறுதல் செய்தல், நில எல்லையை உறுதிப் படுத்திக் கொள்ளுதல், பாகப்பிரிவினை உள்ளிட்ட வற்றிற்கு பெரும் தொகை செலவழிக்க முடியாத நிலையில் உள்ளனர்.  கிராமப்புறங்கள் உட்பட ரியல் எஸ்டேட் துறையின் வீழ்ச்சி காரணமாகவும் பெரும் கார்ப்பரேட்டுகள் மற்றும் முதலாளிகள் நிலங்களை வளைத்துப் போடுவதன் காரணமாகவும் நிலத்தின் மதிப்பு கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், எளிய மக்கள் நெருங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இது சார்ந்த அனைத்து கட்டணங்களையும் அரசு ஈவிரக்கமின்றி உயர்த்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.