tamilnadu

img

16000 மாற்றுத்திறனாளிகளை அடையாளம் காண முடியவில்லை சென்னை மாநகராட்சி அதிகாரி தகவல்

சென்னை, ஆக. 29 - 16 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளை அடையாளம் காண முடியவில்லை என்றும், அடையாளம் காணப்பட்டவர்களில் விடுபட்டுள்ள 10 ஆயிரம் பேருக்கு ஒருவாரத்தில் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழக அரசு அறிவித்த ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையை அடையாள அட்டை உள்ள அனைவருக்கும் வழங்க கோரி ஆக.28 அன்று மாற்றுத்திறனாளிகள் ஆணையரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் நிர்வாகிகளுடன், ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக சனிக்கிழமையன்று (ஆக.29) சென்னை மாநகராட்சி வருவாய் மற்றும் நிதிநிர்வாக துணை ஆணையர் மேகநாத ரெட்டியை சந்தித்து சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பாரதிஅண்ணா, சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஜெயசந்திரன் (வடசென்னை), சுரேந்திரன் (மத்திய சென்னை), கே.பி.பாபு (தென்சென்னை)ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சென்னை மண்டல மாற்றுத்திறனாளிகள் வளர்ச்சி அலுவலர் (டிடிஆர்ஓ) பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தை யில், மாநகராட்சி பகுதி யில் 46 ஆயிரத்து 487 பேர் உள்ளனர். இவர்களில் 30 ஆயிரத்து 465 பேர் அடையாளம் காணப்பட்டு 20 ஆயிரத்து 503 பேருக்கு (44 சதவீதம்) நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. விடுபட்டுள்ளவர்களுக்கு அடுத்த வார இறுதிக்குள் நிவாரண தொகை வழங்கப்படும். அடையாளம் காணமுடியாத 15 ஆயிரம் 992 பேரை கண்டறியும் பணிகளை மேற்கொண்டுள்ளோம். நிவாரணம் கிடைக்காதவர்கள் பட்டியல் அளித்தால் அல்லது இலவச அழைப்பு எண் 18004250111 ல் தெரிவித்தால் அவர்களை பரிசீலித்து உடனடியாக நிவாரண தொகை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அடையாள அட்டை / மருத்துவர் சான்று இல்லாதவர்களுக்கு, பார்த்தால் அடையாளம் காணும் வகையில் உள்ளவர்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மூலம் தற்காலிக மருத்துவ சான்றும், அடையாள அட்டையும் வழங்க வேண்டும். இதனை விளம்பரப்படுத்தும் வகையில், கொரோனா தடுப்பு ஊழியர்கள் மூலம் வீடு வீடாக தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை செயல்படுத்த அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.