சென்னை, மே 20-தமிழகத்தில் இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.இச்சட்டத்தின் கீழ், சமூக, பொருளாதார ரீதியாக நலிவடைந்த குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் தனியார் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை இலவசமாக கல்வி பயில்வதற்கான கட்டணங் களை மத்திய, மாநில அரசுகள் ஏற்கின்றன. தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு இடங்கள் இதற்காக ஒதுக்கப்படுகின்றன.இதன்படி இந்த ஆண்டு ஒரு லட்சத்து 21 ஆயிரம் இடங்களுக்கு, 1 லட்சத்து 20 ஆயிரத்து 989 பேர் விண்ணப்பித்துள்ளதாக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.இதுவரை நேரடியாக மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில், இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தி மாணவர்களை சேர்க்க அரசு திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.