tamilnadu

img

கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்: வைரமுத்து

செங்கல்பட்டு:
காஞ்சிபுரம் மாவட்டம், காட்டாங் கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில் செயல்பட்டுவரும் தமிழ்ப்பேராயம் சார்பில் ஆண்டு தோறும் தமிழ் இலக்கியப்படைப்பாளிகள், தமிழ் இதழ், தமிழ்ச் சங்கங்கள்  மற்றும் தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.இதனடிப்படையில் 7வது ஆண்டாக விருது வழங்கும் விழா புதனன்று (செப்.25)  எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தில் பெரம்பலூர் மக்களவை உறுப்பினரும், கல்வி நிறுவன வேந்தருமான பாரிவேந்தர் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சிறப்ப விருந்தினராக கவிப்பேரரசு வைரமுத்து கலந்துகொண்டு படைப்பாளிகளுக்கு விருதுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் வைரமுத்து கூறியதாவது:-

கீழடி ஆய்வுகளை சிலர் தவறாக பேசி வருகின்றனர். மொழி பொய் சொல்லலாம், வரலாறு கூட பொய் சொல்லலாம்,  சில நேரங்களில் ஆராய்ச்சிகள் கூட பொய் சொல்லலாம், கரிமச் சோதனை பொய் சொல்லாது. கீழடியில் கிடைக்கப்பட்ட பொருட்கள் எல்லாம் கரிம சோதனை செய்யப்பட்டு  காலங்கள் குறித்து அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது. கீழடி ஆராய்ச்சி மெய்யாகி விட்டால் இதுவரைக்கும் நம்பப் பட்டுவந்த வரலாறு பொய்யாகிவிடுமோ என்ற அச்சத்தில்  சிலர் பிதற்றுகின்றனர். கீழடி என்பது இன்னும் மெய்ப்பிக்க வேண்டிய நீண்ட பயணம்.  இன்னும் தோண்டத்தோண்ட உண்மைகள் கிடைக்கலாம். சிந்து சமவெளிக்கு முந்தைய சமவெளியாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. 

இதுவரைக்கும் சொல்லியிருக்கும் உண்மைகள் எல்லாம் தமிழர்களின் தொன்மையை வரலாற்றுப் பூர்வமாகவே மெய்ப்பிக்கின்றன. கீழடி பகுதியைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்.  இதைத் தமிழர்களின் நாகரீகம் என்று கருதாமல் இந்திய நாகரீகம் என்று கருதுங்கள். ஆசியாவின் நாகரீகம் என்று கருதுங்கள். உலக நாகரீகம் என்று மாற்றுங்கள். அவ்வாறு செய்தால்,  தமிழர்களின் பெருமை  நாகரீகத்தின் உச்சத்தை உணரக்கூடிய நாள் வரும்.
அரசியல் கடந்து, சாதி கடந்து, வாக்குவங்கியை மறந்து தமிழர், நாகரீகம், பாரம்பரியம், தொன்மை என்று ஆராய்ந்தால் உலக அரங்கில் தமிழர்களின் நாகரீகம் கொடிகட்டிப் பறக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.