tamilnadu

img

இளைஞர்களின் உந்துசக்தி தோழர் தே.லட்சுமணன்... படத்திறப்பு விழாவில் தலைவர்கள் புகழாரம்

செங்கல்பட்டு:
தோழர் தே.லட்சுமணன் இளைஞர்களின் உந்து சக்தியாக விளங்கியவர் என்று செங்கல்பட்டில் சனிக்கிழமையன்று  நடைபெற்ற படத்திறப்பு நினைவேந்தல் கூட்டத்தில் தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான  மறைந்த தோழர் தே.லட்சுமணன் அவர்களின் படத்திறப்பு விழா மற்றும் நினைவேந்தல் கூட்டம் செங்கல்பட்டு கட்சியின் மாவட்டக்குழு அலுவகத்தில் மாவட்டச் செயலாளா் இ.சங்கர் தலைமையில் நடைபெற்றது.  

தோழர் தே.லட்சுமணன் உருவப் படத்தை கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.  மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன், மாநிலக்குழு உறுப்பினர்கள் பி.சுந்தரராஜன், ஆறுமுகநயினார், எஸ்.கண்ணன், வா.பிரமிளா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.மோகனன், இ.முத்துக்குமார் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.

நல்ல பண்பாளர்
மத்தியகுழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் பேசுகையில்,” வயது வித்தியாசமின்றி அனைத்து தோழர்களிடமும் சமமாக பழகக் கூடிய நல்ல பண்பாளர். அரசுப் பணியில் இருந்தபோதும், அதற்குப் பிறகும் அடக்குமுறையை எதிர்கொண்டு துறைவாரி சங்கங்களை அமைத்தவர் தோழர் லட்சுமணன். கலாச்சார சீரழிவு, மத்திய-மாநில அரசுகளின் அடக்குமுறைக்கு எதிராகவும் இளைஞர்களை பட்டை தீட்டிய தோழர் லட்சுமணனின் மறைவு நமக்கு எல்லாம் பேரிழப்பு. அவர் விட்டுச் சென்ற பணியை முன்னெடுத்து இயக்கத்தை வலுவாக கட்டுவதே அவருக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும் என்றார்.

பொது வாழ்க்கையில்  முன்னுதாரணமாக திகழ்ந்தவர் 
மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், கொரோனா காலம் என்பது எப்பேற்பட்ட கொடுமையான காலம் என்பதை நாம் அனைவரும் உணர்ந்து வருகிறோம். ஒரு தலைவர் மறைந்தார் என்ற சோகம் மறைவதற் குள் மற்றொரு தலைவர் மறைந்தார் என்ற அதிர்ச்சி தகவல் வருகின்றது. சாதி, மதம் இல்லை என மேடைகளில் பேசிவிடலாம். பல புத்தகங்கள் கூட எழுதிவிடலாம். சொந்த வாழ்க்கையில் செய்வது காட்டுவது மிகவும் கடினம்.   தனது இரண்டு மகன்களுக்கும் சாதி, மத மறுப்புத் திருமணத்தை நடத்தி அதை செய்து காட்டியவர்தான் தோழர் லட்சுமணன். பொது வாழ்க்கையில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த தோழர் லட்சுமணன்,  பல மாவட்டங்களுக்கு பொறுப்பாளராகவும், வெகுஜன அமைப்புகளின் தலைவராகவும், கலை-இலக்கிய வாதியாகவும் திறம்பட செயல்பட்டவர். ஐந்து புத்தகங்கள் மற்றும் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அவர் எழுதிய புத்தகங்களை படித்தால் அவரைப்பற்றி புரிந்துகொள்ள முடியும். அவர் எழுதிய பகுத்தறிவாளன் என்ற புத்தகம் புத்தர் பற்றிய அவரது ஆய்வு குறித்து தமிழகத்தில் இதுவரையிலும் யாரும் செய்திருக்க முடியாது. இந்திய சமுகம் குறித்து மிகப் பெரிய ஆய்வுகளை தொகுத்தவர் தோழர் லட்சுமணன். அவர் விட்டுச் சென்ற பணியை நாம் தொடரவேண்டும் என்று கே. பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.