tamilnadu

img

இதுவரை 30 சதவீத பட்டாசுகளே விற்பனை.... 8 லட்சம் தொழிலாளர்களை காப்பாற்ற பட்டாசு வெடிக்கும் கால அளவை நீட்டிக்க வேண்டும்....

தமிழக அரசு பட்டாசு வெடிக்கும் கால அளவை நீட்டிக்க வேண்டுமென தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் சங்க கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் வி. ராஜா சந்திரசேகரன் கூறியுள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் சுமார் எட்டு லட்சம் தொழிலாளர்கள் பட்டாசுத் தொழிலை நம்பி உள்ளனர். 2015-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் பசுமைத் தீர்ப்பாயம் தொடுத்த வழக்கில், “பட்டாசு வெடிப்பதால் பெரும் மாசு ஏற்படுகிறது. பட்டாசு வெடிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தது”. இந்த வழக்கில் 2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஒரு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது அதில், “பட்டாசு வெடிப்பதற்கு இரண்டு மணி நேரம் அனுமதியளித்திருந்தது. இந்த வழக்கு தில்லி மாநகரை மையமாக வைத்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு. அதில் “தில்லியில் காற்றில் புகை மாசு கலப்பதால் மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியவில்லை” எனக் கூறப்பட்டது. தில்லியை தவிர மற்ற மாநிலங்களில் இதுபோன்ற பிரச்சனை அதிகம் இல்லை என்று தான் தோன்றுகிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்பதால் இது இந்தியா முழுமைக்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.பட்டாசு வெடிப்பதற்கு நேரக் கட்டுப்பாடு விதித்திருப்பது இந்தத் தொழிலை நம்பியுள்ள வணிகர்கள், தொழிலாளர்களுக்கு மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டாசு உற்பத்தி குறைவதோடு தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆய்வு நிறுவனங்களின் கருத்து
பட்டாசு வெடிப்பதால் புகை மாசு ஏற்படாது. நான்கு மணி நேரத்துக்கு மேல் பட்டாசின் புகை மாசு இருக்காது என நாசா ஆராய்ச்சி மையம், இந்திய ராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (DRDA), கான்பூர் ஐடிஐ போன்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், நீதிமன்றத் தீர்ப்பு இதற்கு நேர்மாறாக உள்ளது.தீபாவளிப் பண்டிகையை ஒவ்வொரு மாநிலமும் வேறு வேறு நேரங்களில் கொண்டாடுகின்றன. தமிழகத்தில் காலை நேரத்திலும் வடமாநிலங்களில் மாலை நேரத்திலும் கொண்டாடுகிறார்கள். தமிழகத்தில் காலை ஒரு மணி நேரம், மாலையில் ஒரு மணி நேரம் பட்டாசு வெடிக்க வேண்டுமென அரசு அறிவுறுத்தியுள்ளது. இப்படி ஒரே நேரத்தில் நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க வைத்தால் தான் மாசு அதிகரிக்கும். எனவே ஆய்வு நிறுவனங்களின் கருத்தை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். தமிழகத்தில் தான் பட்டாசு உற்பத்தி அதிகம். வேறு மாநிலங்களில் அதிக உற்பத்தி கிடையாது. எனவே தமிழக அரசு இங்குள்ள தொழிலாளர்களையும் தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான உற்பத்தியாளர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அமெரிக்கா, ஜப்பானில்...
கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக உலகமே முடங்கிக்கிடந்த நேரத்தில் அமெரிக்க சுதந்திர தினத்தை அந்நாட்டு மக்கள் வெடி வெடித்து கொண்டாடினார்கள். ஜப்பானில் கொரோனாவால் முடங்கிக் கிடந்த மக்களை மகிழ்விக்க “பட்டாசுகள் வெடித்து” அது ஒரு நிகழ்வாகவே கொண்டாடப்பட்டது. கடந்த ஆறு மாத காலங்களாக மக்கள் எந்த ஒரு பண்டிகையையும் கொண்டாடாத நிலையில் தீபாவளியை அவரவர் வீடுகளிலிருந்துதான் கொண்டாடுவார்கள். இது ஒன்றும் மொத்தமாக மககள் கூடும் பண்டிகையல்ல. பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாட்டில் சில தளர்வுகளை உச்சநீதிமன்றம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் பட்டாசுத் தொழிலை நம்பியுள்ள எட்டு லட்சம் தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களை பாதுகாக்க மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் இதற்கு ஜனநாயக அமைப்புகளும் குரல் கொடுக்க வேண்டும். 

தடையால் பாதிப்பு
கடந்தாண்டு இந்தியாவில் 2,500 கோடி ரூபாய்க்கு பட்டாசு விற்பனையான நிலையில் இந்தாண்டு 30 சதவீதம் மட்டுமே இதுவரை விற்பனையாகி உள்ளது. மேலும் சில மாநிலங்கள் பட்டாசு வெடிக்கத் தடை விதித்துள்ளதால் விற்பனை மேலும் 40 சதவீதம் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றார்.கொரோனா தொற்றால் பட்டாசு விற்பனைக்கு பல மாநிலங்கள் தடை விதித்துள்ளதால், இந்த தீபாவளிக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் விற்கப்படாமல் போகலாம் என்று சிவகாசியில் உள்ள பட்டாசு உற்பத்தியாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.இராஜஸ்தான், ஒடிசாவில் பட்டாசு விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பசுமைப் பட்டாசுகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது. இந்த மாநிலங்கள் தான் பட்டாசுத் தொழிலின் மிகப்பெரிய சந்தைகள் என்று கூறும் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர் ஒருவர், சிவகாசி என்ற சிறிய நகரத்திலிருந்து நாட்டின் பட்டாசுத் தேவையில் 90 சதவீதம் பூர்த்தி செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட 3,000 கோடி ரூபாய்க்கு உற்பத்தி நடைபெறுகிறது.

அனுப்பப்பட்டதும் விற்காமல் தேங்கும் அபாயம்
தீபாவளிக்கு சரியான நேரத்தில் பட்டாசுகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அக்டோபருக்கு முன்பே சிவகாசியிலிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டன. இருந்தாலும் தடை காரணமாக, பட்டாசுகள் விற்காமல் தேங்கும் அபாயம் உள்ளது என்று கூறினார்.பட்டாசு வெடிப்பது கொரோனா நோயாளிகளை பாதிக்கும் என்பதை நிரூபிக்க சரியான தரவு எதுவும் இல்லை என்கிறார் மற்றொரு உற்பத்தியாளர்.இந்தாண்டு உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின்படி, உற்பத்தியாளர்கள் முக்கியமாக பசுமைப் பட்டாசுகளை தயாரித்துள்ளனர். சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து எந்த கேள்வியும் இல்லை என்கிறார் இன்னொரு உற்பத்தியாளர்.பட்டாசு உற்பத்தியாளர்களை மக்கள் பெரும்பாலும் ஆதரிக்கின்றனர். பலர் சமூக ஊடகங்களில் “தயவுசெய்து பட்டாசுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்! பட்டாசு என்பது சிவகாசி அதைச் சுற்றியுள்ள ஏராளமான மக்களின் வாழ்வாதாரமாகும். தயவுசெய்து அவர்களின் திருவிழாவைக் கெடுக்க வேண்டாம். அதன் மூலமே அவர்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள்” என பதிவிட்டுள்ளனர்.

நமது நிருபர்கள்