சென்னை, மே 20-சென்னை மாநகரசாலைகளில் நீண்டநாட்களாக பலர் தங்களது பழுதானகார் மற்றும் வாகனங்களை நிறுத்தி வைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அந்த பகுதியில் சுகாதார கேடும் ஏற்படுகிறது.இதுதொடர்பாக போக்குவரத்து காவல்துறையும் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் சாலையோரமாக நிறுத்தப்பட்டுள்ள கார்களை உடனடியாக அப்புறப்படுத்த சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.இதையடுத்து போக்குவரத்து காவல்துறையினர் திங்களன்று (மே 20) சென்னை மாநகர் முழுவதும் சிறப்பு சோதனை என்ற பெயரில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சாலையோரமாக குப்பைகள் போல தேங்கிக் கிடந்த ஏராளமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வண்ணாரப்பேட்டை பகுதியில் வேன் மற்றும் கார்ஆகியவற்றை போக்குவரத்து காவல்துறையினர் அங்கிருந்து கிரேன் மூலம் அகற்றி எடுத்துச்சென்றனர்.இதுபோன்று பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களிடம் அபராதம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காரின் சொந்தக்காரர்கள் தங்களது காருக்கான உரிய அவணங்களை காட்டி பறிமுதல் செய்யப்பட்ட கார்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.