tamilnadu

கோவையில் மனைவியை கொன்று கணவன் தற்கொலை

கோவை, ஜூன் 3-கோவையில் மனைவியின் தலையில் சிலிண்டரை  போட்டு கொன்ற கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை தொண்டாமுத்தூர் சாலை, வேடபட்டி நஞ்சப்பகவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (65). இவர் பூ மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார்   கம்பெனியில் காவலாளியாக பணிபுரிந்துவந்தார்.இவரது இரண்டாவது  மனைவி சுப்பாத்தாள் (60). இவர்கள் இருவருக்கும்திருமணமாகி 20 வருடங்களாகிறது. மாரிமுத்துவின் தம்பி கிருஷ்ணன்சற்று மனநிலை பாதிப்பு ஏற்பட்டு உள்ளார். அவரை சுப்பாத்தாள் கவனித்து வந்துள்ளார். இதனால் சுப்பாத்தாள்வீடுவீடாக வெற்றிலை வியாபாரம் செய்து வந்த பணி பாதிப்படைந்துள்ளது. இதனால் கணவன் மனைவிக்குள்ளாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் திங்களன்று அதிகாலை2 மணியளவில் கணவன், மனைவி இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி வீட்டில் இருந்த சமையல் சிலிண்டரை எடுத்து உறங்கிக் கொண்டிருந்த சுப்பாத்தாள் தலையில் மாரிமுத்து  போட்டார். இதில் சம்பவ இடத்திலேயே சுப்பாத்தாள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். ஆத்திரத்தில் மனைவியைக் கொலை செய்த குற்ற உணர்ச்சியில், அவரும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனையறிந்தஅக்கம் பக்கத்தினர் வடவள்ளி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து வடவள்ளி காவல்துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.