tamilnadu

img

கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணிகளை துவக்கம்

கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி மூலமாக தொடக்கிவைத்தார். 
சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கொந்தகை, மணலூா், அகரம் ஆகிய இடங்களில் கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், 7 ஆம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கி கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் நிறைவடைந்தது.
இதில் பண்டைய கால தமிழா்கள் பயன்படுத்திய அணிகலன்கள், முதுமக்கள் தாழிகள், மண் சட்டிகள், குறியீடுகளுடன் கூடிய பானைகள், தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன. மேலும் மனித எலும்புக் கூடுகளும் விலங்குகளின் எலும்புகளும் கண்டறியப்பட்டன. 
அதைத்தொடா்ந்து கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்ததை தொடர்ந்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கீழடியில் 8 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் பிப்ரவரி மாதம் தொடங்கும் எனவும் இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.  அதன்படி, கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் 8-ம் கட்ட அகழாய்வுப் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து காணொலி மூலமாக இன்று தொடக்கிவைத்தார். மேலும் கங்கை கொண்ட சோழபுரம், மாளிகை மேட்டில் 2-ஆம் கட்ட அகழாய்வு பணிகளையும் முதல்வர் தொடக்கிவைத்தார்.