சென்னை,டிச.3- சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை கோரிய வழக்கில் தீர்ப்பை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. சென்னை ஐ.ஐ.டி.யில் படித்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா கடந்த 9 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த முகமது சலீம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
‘ஐ.ஐ.டி.யில் படித்த மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். 2006 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சென்னை ஐ.ஐ.டி.யில் படித்த ஆந்திரா, கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த 14 மாணவர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்துள்ளனர். இதற்கு ஆசிரியர்களின் துன்புறுத்தல், சாதி, மதம், மொழி பாகுபாடுகள் தான் காரணம். பாத்திமா லத்தீப் சாவில் மதப் பின்னணி உள்ளது. தன்னை துன்புறுத்திய சில பேராசிரியர்களின் பெயர்களை தனது மொபைல் போனில் பாத்திமா குறிப்பிட்டு இருந்தும், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆங்கிலத்தில் சரளமாக பேசத்தெரியாத எஸ்.சி., எஸ்.டி., மற்றும் பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் ஐ.ஐ.டி. வளாகத்தில் 2 ஆம் தர மாணவர்களாகவே பாவிக்கப்படுகின்றனர். இதுபோன்ற பிரச்சனைகளை களைந்து தற்கொலை சம்பவங்களை தடுக்க வேண்டும். எனவே சென்னை ஐ.ஐ.டி.யில் இதுவரை நடந்துள்ள மாணவர்கள் மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேம லதா ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.