tamilnadu

img

பி.எம்.கேர்ஸின் வெண்டிலேட்டர் ஊழல்....

சண்டிகர்
பி.எம்.கேர்ஸ் நிதியம் மூலமாக ரூ.2000 கோடி ஒதுக்கப்பட்டதாகக் கூறி 60ஆயிரம் வெண்டிலேட்டர்கள் வாங்கப்பட்டிருப்பதில் மிகப்பெரும் மோசடி நடந்துள்ளது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், இமாச்சலப்பிரதேச மாநில தலைவர்களில் ஒருவரும் சிம்லா மாநகர முன்னாள் துணை மேயருமான திக்கெந்தர் சிங் பன்வார் பல்வேறு விபரங்களை வெளியிட்டுள்ளார்.
அவ்விபரங்கள் வருமாறு:பி.எம் கேர்ஸ் எனப்படும் பிரதமரால் உருவாக்கப்பட்ட நிதியத்தில் இருந்து கிட்டத்தட்ட 60,000 வெண்டிலேட்டர்களை வாங்குவதற்காக ரூ. 2,000 கோடி ஒதுக்கப்பட்டதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த வெண்டிலேட்டர்களின் தரம் குறித்து மருத்துவர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வந்துள்ளது.

பி.ஜி.ஐ. மருத்துவமனையில் “டாக்டர்கள்-நுரையீரல் நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர்கள் மேற்படி வெண்டிலேட்டர்களில் வழக்கமான மற்றும் கட்டாய சோதனைகளை மேற்கொண்டனர். ஆனால்
வெண்டிலேட்டர்கள் பயனளிப்பதாக இல்லை. இந்த தரமற்ற இயந்திரங்களை நாங்கள் பயன்படுத்த முடியாது; நோயாளிகளை, குறிப்பாக கோவிட் -19 நோயாளிகளை ஆபத்தில் வைக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.அதேபோல, அகமதாபாத் மருத்துவமனையின் மருத்துவர்கள் பிஎம் கேர் நிதியத்தின் கீழ் வாங்கிய வெண்டிலேட்டர்களை நிராகரித்துள்ளனர். உண்மையில் இந்த வெண்டிலேட்டர்களில் வைக்கப்பட்டதால் மருத்துவமனையில் ஏராளமான கோவிட் நோயாளிகள் இறந்ததாக செய்திகள் வந்துள்ளன.

கோவிட் -19 நெருக்கடி என்பது ஒரு வாய்ப்பாக பார்க்கப்பட வேண்டும் என்று பிரதமர் கூறியிருந்தார்.அவரது பாஜக கூட்டாளிகளுக்கு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன என்பதுதான் இதன்பொருள். அவர்களில் பெரும்பாலோர் மிகப் பெரிய விநியோகஸ்தர்கள். அவர்கள் இந்த காலகட்டத்தை தங்கள் லாபத்தை அதிகரிக்க பயன்படுத்துகின்றனர்.வெண்டிலேட்டர் மோசடி என்பது இவர்களின் மற்றொரு “உன்னதமான” மோசடியாகும்.ஒரு தகவல் அறியும் விசாரணையின் மூலம் வெளிவந்த தகவல்கள், இந்த வெண்டிலேட்டர்களைத் தயாரிக்க / வாங்க வேண்டிய பிற நிறுவனங்களிடமிருந்து ஆளும் கட்சிக்கும்கூட்டாளிகளுக்கும் இடையிலான மோசமான கூட்டுக் களவாணி உறவுகளை அம்பலப்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தங்கள், உபகரணங்களை வாங்குவதற்கும் சோதனை செய்வதற்கும் உள்ள நடைமுறை நெறிமுறை களைத் தவிர்த்தே வாங்கப்பட்டுள்ளன. வணிக நிறுவனங்கள் மற்றும் ஆளும் கட்சியின் தலைமையிடையேயான நெருக்கமும், குறிப்பாக பிரதமரின் வலுவான நெருக்கமும் தெரிய வந்துள்ளது.

எடுத்துக்காட்டாக, பி.ஆர்.ஷெட்டி - ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஒரு தொழிலதிபர் மற்றும் ஜோதி சிஎன்சி ஆட்டோமேஷன் லிமிடெட்உரிமையாளர். ஜோதி சி.என்.சி. நிறுவனம், பிரதமர் மற்றும் குஜராத் முதல்வர் இரு வருக்கும் நெருக்கமானதாகும். அகமதாபாத் மருத்துவமனையில் வழங்கப்பட்ட வெண்டி லேட்டர்கள் ஜோதி சிஎன்சி ஆட்டோமேஷன் மூலம் வழங்கப்பட்டவை தான்.ஜோதி சிஎன்சி ஆட்டோமேஷன் மற்றும் ஆந்திரப் பிரதேச மெட் டெக் ஆகிய நிறுவனங் களுக்கு வெண்டிலேட்டர்களுக்காக மே மாதத்தில் ரூ.22.5 கோடி முன்கூட்டியே அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அவர்களின் வெண்டிலேட்டர்களின் தரநிலை காரணமாக இருவரும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். ஜோதி சி.என்.சி தயாரிக்கும் தமன் -1 வெண்டிலேட்டர்கள் திறமையாக செயல்பட முடியவில்லை என்று மே 15 அன்று அகமதாபாத் சிவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மாநில அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார் என்ற விபரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

முன்னதாக, நிதிஆயோக் தலைமை நிர்வாக அதிகாரியின் தலைமையில் மத்திய அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு அதிகாரமளிக்கப்பட்ட குழு, தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளும் நோக்கம் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட இரண்டு லட்சம் வெண்டிலேட்டர்கள் தேவைப்படும் என்றும், பிஎம் கேர் நிதியத்தின் கீழ் ரூ .2,000 கோடி 60,000 வெண்டிலேட்டர்களை வாங்க ஒதுக்கப்படும் என்றும் அது மதிப்பிட்டு, மார்ச் 27, 2020 அன்று டெண்டர் கேட்டிருந்தது. எச்.எல்.எல் லைஃப் கேர் லிமிடெட் எனும் நிறுவனம் வெண்டிலேட்டர் கொள்முதல் செய்வதற் கான ஒரே நிறுவனமாக நியமிக்கப்பட்டது. ஆர்டர்கள் திருத்தப்பட்டு இறுதியில் 60,884 வெண்டிலேட்டர்களுக்கான ஆர்டர் செய்யப்பட்டது. கர்நாடகாவின் மைசூருவில் உள்ள பி.இ.எல் (பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்) மற்றும் ஸ்கேன்ரே டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை 30,000 வெண்டிலேட்டர்களை தயாரிக்க உத்தரவுகளைப் பெற்றன; அக்வா ஹெல்த் கேர் மற்றும் மாருதி சுசுகி லிமிடெட் -10,000 வெண்டிலேட்டர்கள்; AMTZ-13,500; அல்லைடு மெடிக்கல் லிமிடெட் (ஏ.எம்.எல்) குருகிராம் -350. எனப் பெற்றன.  இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, ஏ.எம்.எல்., ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும்.   2,000க்கும் மேற்பட்ட வெண்டிலேட்டர்களை பல மாநில அரசாங்கங்களுக்கும், இராணுவ மருத்துவமனைகள் உட்பட, பொதுத்துறையில் உள்ள மருத்துவமனைகளுக்கும், போதுமான கால அவகாசத்தில் வழங்கிய சிறப்பினைக் கொண்டுள்ள நிறுவனமாகும் அது. இருப்பினும் அதற்கு வழங்கப்பட்டது வெறும் 350 வெண்டிலேட்டர்களுக்கான ஆர்டர் தான். அக்வா மற்றும் AMTZ க்கு உயர்தர வெண்டிலேட்டர்களை தயாரிப்பதில் முன் அனுபவம் இல்லை. உயர்தர வெண்டிலேட்டர்களைத் தயாரிப்பது கணிசமான கால நேரத்தை எடுத்துக்கொள்வதாகவும் இருக்கும். இந்த நிறுவனங்களின் திறனை அரசாங்கம் தவறாக மதிப்பிட்டுள்ளது அல்லது வேண்டுமென்றே அவற்றைப் பற்றிய உண்மைகளை தவறாக சித்தரித்திருக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்த நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய  தொழில்நுட்பங்களை பின்பற்றாத சிக்கல்கள் மட்டுமல்லாமல், டெண்டர் விடும்போது, குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஏற்றவாறு சரிசெய்து விடப்பட்டுள்ளது. KEN என்பது ஒரு வலைத்தளம். அக்வா நிறுவனம் டெண்டர் எடுப்பதற்காக வெளிப்படைத்தன்மையின் அனைத்து விதிமுறைகளுக்கும் எதிராக நடவடிக்கைகள் நடந்துள்ளன என்று KEN கூறுகிறது. அதிலும் குறிப்பாக இது வெண்டிலேட்டர்களின் சான்றிதழ் தொடர்பான பிரச்சனையாகும். அக்வா யூனிடாஸ் எனும் ஒரு மூன்றாம் தரப்பு நிறுவனத்திடமிருந்து (a third party company) சான்றிதழை பெற்றுள்ளது. ஆனால் யூனிடாஸ் நிறுவனம் என்பது வலைத்தளத்தில் மட்டுமே இருக்கிறது.  அப்படி ஒரு நிறுவனம் வெளியில் எங்குமிருப்பதற்கான அடையாளமே இல்லை.இந்த வெண்டிலேட்டர்களை வாங்கியதில், இந்த கொள்முதல் எவ்வாறு செய்யப்பட்டது என்பதில், மர்மங்களுக்கு மேல் மர்மங்கள் நிறைந்துள்ளன. இந்த மோசடி குறித்து முழுமையான விசாரணை தேவைப்படுகிறது.  ஆனால், இந்த மோசடி பிரதமரிடம் இருந்தே துவங்குகிறது.

பீப்பிள்ஸ் டெமாக்ரசி, ஆகஸ்ட் 30 ஏட்டிலிலிருந்து..... 

தொகுப்பு: ஆர்.எஸ்.செண்பகம்