கோவை காந்திபுரம் பகுதியில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் திருநங்கை அபிராமியின் சடலம் எனத் தெரியவந்துள்ளது.
கோவை காந்திபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில் தகரம் மற்றும் தென்னங்கீற்றால் அமைக்கப்பட்ட கூரையிலிருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது பெண் ஒருவரின் உடல் தீயில் கருகிய நிலையில் கிடந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் காவல் துறையினரின் விசாரணையில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் அதே பகுதியைச் சேர்ந்த திருநங்கையான அபிராமியின் சடலம் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து திருநங்கையின் மரணம் தொடர்பாக ரத்தினபுரி காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.